மக்களின் உள்ளங்களை வெல்ல
அறிவாளிகள் அறிவை நம்புவார்கள்
ஞானிகள் இதயத்தை நம்புவார்கள்.
________________
ஹகீமுல் இஸ்லாம் மவ்லானா முஹம்மத் தய்யிப் காசிமி (ரஹ்)
-------------------------
பொதுவாக கல்வி மூலம் அறிவு பெற்றவர்கள் தாங்கள் கற்ற கல்வி ஞானத்தின் மூலமே மக்களை வென்று விடலாம் என்று நினைப்பார்கள்.
ஆனால், அல்லாஹ் தன்னுடைய சிறப்பு அடியாளர்களுக்கு அளிக்கின்ற ஹிக்மத் என்னும் அறிவு ஞானத்தை பெற்றவர்கள், வெகு ஜன மக்களின் இதயத்தை வெல்வதின் மூலமே வெற்றி பெறுவார்கள்.
#ஞானி ஜுனைதுல் பஃதாதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் காலத்தில் முஃதஜிலாக்கள்
"இவ்வுலகிலும் மறுஉலகிலும் அல்லாஹ்வை பார்க்க இயலாது" என்று வாதிட்டனர்.
அந்த காலத்தில் இருந்த அறிஞர் பெருமக்கள் அவர்களிடம் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை சொல்லி வாதாடியும் அவர்களை விவாதத்தில் வெல்ல முடியவில்லை.
இறுதியில் ஞானி ஜுனைதுல் பஃதாதி அவர்களிடம் வந்தார்கள். அவர்களை எப்படி விவாதத்தால் வெல்வது என்று கேட்டார்கள்.
பொதுவாக ஞானி அவர்கள் இது போன்ற விவாதத்தில் ஈடுபட விரும்பமாட்டார்கள். ஆனால், பஃதாதி அவர்கள் அவர்களிடம் விவாதம் செய்ய ஒப்புக்கொண்டு அதை பொது மக்களுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்கள்.
பஃதாதி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் விவாதம் செய்கிறார்கள் என்று கேள்விப் பட்ட உடன் பஃதாத் மாநகரத்தில் மக்கள் திரண்டார்கள்.
முஃதஜிலாக்கள் அறிஞர்களும் வருகை புரிந்தார்கள். ஞானி அவர்கள், அவர்களை நோக்கி "நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள"் என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் "இம்மையிலோ மறுமையிலோ அல்லாஹ்வை கண்களால் பார்க்கும் சக்தி மனிதர்களுக்கு இல்லை" என்றார்கள்.
அதற்கு ஞானி அவர்கள், "நான் கேட்பதற்கு அல்லாஹ்விற்கு பயந்து உண்மையை சொல்லுங்கள்.
அல்லாஹ்வை பார்க்க வேண்டும் என்று உங்களின் உள்ளம் விரும்புகிறதா? என்று கேட்டார்கள்.
அவர்கள், ஆமாம் எங்கள் உள்ளம் விரும்புகிறது"என்றார்கள்.
"பார்க்க முடியாத ஒன்றை உள்ளம் விரும்புமா?" என்ற ஞானி அவர்கள்
" வாசனையை நுகரத்தான் உள்ளம் விரும்பும்
காற்றை சுவாசிக்க தான் உள்ளம் ஆசைப்படும்
ருசியை சுவைக்கத்தான் உள்ளம் விரும்பும்.
இவற்றை எந்த மனிதனும் பார்க்க வேண்டும் என்று ஆசை பட மாட்டான்.
அவன் இதயத்தில் அந்த ஆசையே எழும்பாது.
ஏனென்றால் அவற்றை கண்ணால் காண முடியாது
எதை பார்க்க முடியுமோ அதை பார்க்கத்தான் இதயம் விரும்பும்.
எனவே, அல்லாஹ்வை பார்க்க முடியும் என்று உங்கள் இதயம் நம்புகிறது எனவேதான் அதை விரும்புகிறது என்றவர்கள்,"தொடர்ந்து
நம் இதயம் விரும்புகிற ஒன்றை தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "மறுமையில் பவுர்ணமி இரவில் முழு நிலாவை நீங்கள் பார்ப்பதை போல் அல்லாஹ்வை பார்ப்பீர்கள்" என்று இதயம் நம்புவதை உறுதி படுத்தியிருக்கிறார்கள்."
என்றார்கள்.
டி
இந்த பதிலை கேட்டு திகைத்து போன முஃதஜிலாக்களின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது.
பலர் அந்த இடத்திலேயே தவ்பா செய்தார்கள்.
பல நூறு அறிவியல் ஆதாரங்கள் ஏற்படுத்தாத மனமாற்றத்தை ஒரு ஞானி எதிரியின் இதயத்தை நோக்கி விட்ட அம்பு நிகழ்த்திக் காட்டியது.
-----معجزہ کیا ھے
என்ற நூலிலிருந்து
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயீ,தேவ்பந்தி

No comments:
Post a Comment