Friday, August 18, 2017

மூஸா நபியும் சூனியக்காரர்களும்

மூசா நபி யும் சூனியக்காரர்களும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னுடைய தஃப்ஸிர் வகுப்பில் என்னுடைய ஆசிரியரிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம், ஃபிர்அவ்ன், சூனியக்காரர்கள் வசனங்களை பற்றி சில கேள்விகளை கேட்டேன்.
1) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கைத்தடி பாம்பாக மாறியதற்கும் சூனியக்காரர்களின் கயிறு பாம்பாக மாறியதற்கும் என்ன வித்தியாசம்?
2) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் போட்ட கைத்தடி பாம்பாக மாறிய பின்பு வேறு சூனியம் செய்யாமல் சூனியக்காரர்கள் உடனடியாக ஏன் ஈமான் கொண்டார்கள்?
3) நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த ஃபிர்அவ்னும் மற்றவர்களும் ஏன் ஈமான் கொள்ளவில்லை?

அதற்கு என்னுடைய ஆசிரியர் இதற்கான விடை குர்ஆனிலே இருக்கிறது என்று கூறினார்கள்.

1,முதலாவது மூஸா அலைஹிவஸல்லம் அவர்கள் எறிந்த கைத்தடி உண்மையிலேயே பாம்பாக மாறியது. சூனியக்காரர்கள் எறிந்த கயிறும் கைத்தடியும் பாம்பாக மாறாமல் பாம்பு நெளிவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

இதனை பற்றி திருக்குர்ஆனில்,
"மூஸாவே! நீங்கள் அதனை(த் தரையில்) எறியுங்கள்" எனக் கூறினான்.(20:19.)
அவர் அதனை எறியவே அது ஒரு பெரிய பாம்பாகி ஓடிற்று.(20:20)
(அப்போது இறைவன்) "நீங்கள் அதைப் பிடியுங்கள்; பயப்படாதீர்கள். உடனே அதனை முன் போல் (தடியாக) ஆக்கி விடுவேன் (20:21)"

இந்த வசனத்தின் மூலம் மூஸா நபியுடைய கைத்தடி உண்மையிலேயே பாம்பாக மாறி பின் கைத்தடியாக மாறுவதாக அல்லாஹ் சொல்கிறான்.
அதே நேரத்தில் சூனியக்காரர்களின் செயலை பற்றி அல்லாஹ் சொல்லும் போது,
"அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவது போல் இவருக்குத் தோன்றின.(20:66.)
என்று அல்லாஹ் சொல்கிறான்.
இந்த வசனத்தில் அவர்களுடைய சூனியத்தின் காராணமாக கயிறுகள் பாம்பாக மாறியதை போன்று தோன்றியதே தவிர உண்மையான பாம்பாக மாறவில்லை என்று தெரிகிறது.
இது தான் மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் கைத்தடி பாம்பாக மாறியதற்கும் சூனியக்காரர்களின் கயிறுகள் பாம்பாக மாறியதற்கும் உள்ள வித்தியாசம்.

2,இரண்டாவது, சூனிய கலை என்பது நடக்காத ஒன்றை நடப்பது போன்று பிரமையை ஏற்படுத்தும் ஒரு கலையாகும். கைத்தடிகளும் கயிறுகளும் மற்றவர்களுக்கு பாம்பு நெளிவது போன்று தெரியுமே தவிர சூனியக்காரர்களுக்கு கைத்தடியாகவும் கயிறுமாகவே தோன்றும். ஆனால், மூஸா நபியின் கைத்தடி அல்லாஹ்வின் சக்தியால் உண்மையான பாம்பாகவே மாறியது. அதைக் கண்டு பயந்த சூனியக்காரர்கள் இது சூனியமாக இருந்தால் நம்முடைய கண்களுக்கு கைத்தடியாக தான் தெரியும். ஆனால், உண்மையான பாம்பாக மாறி இவர்கள் போட்ட கைத்தடியையும் கயிறையும் விழுங்கியதால் இது உண்மையிலேயே சூனியம் இல்லை என்று நம்பியதுடன் இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று புரிந்து கொண்டார்கள். அது என்ன சக்தி என்று புரியாத நிலையில் நாங்கள் மூஸா, ஹாரூன் ஆகியோரின் இறைவனை நம்பிக்கை கொண்டோம் என்று கூறினார்கள்.

3,ஆனால், ஃபிர்அவ்னுக்கும் அவனை சுற்றி உள்ளவர்களுக்கும் சூனியக்காரர்கள் போட்ட கைத்தடியும் கயிறுகளும் பாம்பாக மாறியதும், மூஸா நபி போட்ட கைத்தடி பாம்பாக மாறியதும் ஒன்றாகவே தெரிந்தது.
எனவே தான், ஃபிர்அவ்ன், ஈமான் கொள்ளாமல்
"நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தாம் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களுடைய தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களுடைய மாறு கை, மாறு காலை வெட்டிப் பேரீச்ச மரத்தின் வேர்களில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி விடுவேன். நிலையான வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார் என்பதையும் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்(2௦:71)" என்று கூறினான்.
ஃபிர்அவ்னின் மிரட்டலுக்கு ஈமான் கொண்ட சூனியக்காரர்கள் சொன்ன பதிலை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

"அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ செய்துகொள். நீ செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான் (2௦: 72)"
என்று சொன்னார்கள்.
மனிதர்களின் உள்ளங்களில் குழப்பத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சூரத்துன்னாஸ் அத்தியாயத்தில்,
"மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.) (114:4,5)"
"(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர். (114:6)"
என்று அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.
ஆகவே தான், இந்த வசனங்களை ஓதி வந்தால் சூனியக்காரர்களின் சூனியத்தை விட்டும் பாதுகாப்பு கிடைக்கும் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மீள் பதிவு : கணியூர் இஸ்மாயீல் நாஜி

Thursday, August 3, 2017

தொழுக வைக்க ஊதியம் வாங்கலாமா ?

ஆலிம்களே உங்கள் வேலைக்கான கூலியை துன்யாவிலேயே வாங்கி கொண்டீர்கள் எனவே எங்களுக்கு ஆகிறத்திலும் கூலி உண்டு என்று அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி பொய் கூறாதீர்கள் ?என்று சிலரும்
தொழுக வைக்க ஊதியம் வாங்கலாமா என சிலரும் கேட்கிறார்கள்

----- .

***************************************************

மஸ்ஜித்களில் பணியாற்றும் இமாம்களின் பொறுப்பையும் அவர்களின் சிறப்பையும் அறியாததின் விளைவே மேற்கண்ட பதிவு.

கடமையான ஐந்து நேர தொழுகையை இமாம் ஜமாஅத்தாக தொழுவது அவசியம் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

ஒரு மனிதர் தனித்து தொழுவதைவிட ஜமாஅத்தாக தொழுதால் 27 மடங்கு அதிக நன்மை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்கள் மதீனா நகர் சென்றதும் முதல் பணியாக மஸ்ஜிதை உருவாக்கினர்கள்.
அவர்களே இமாமாக தொழவைத்தார்கள்.சுற்று வட்டார கிராமங்களில் மஸ்ஜிதை நிறுவி அங்கே தொழ வைக்க நபிதோழர்களையும் அனுப்பி வைத்தார்கள்.

அண்ணல் நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு பின் மக்கள் தொகை பெருக பெருக மஸ்ஜித்களும் அதிகரித்தன.
ஒரு மஸ்ஜிதில் வக்து வந்ததும் யாராவது ஒருவர் பாங்கு சொல்லுவார். பாங்கு சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் வழமையாக தொழ வருபவர்களில் பெரும்பாலானோர் வந்துவிட்டால் யாராவது ஒருவர் தொழ வைப்பார்.
இமாம் என்று யாரும் நியமிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

நாளடைவில் பாங்கு சொல்லப்பட்ட பின்பு மக்கள் தொழுகைக்காக வந்த பின்னாலும் இமாமத் செய்வதற்கு யாரும் முன் வராத நிலை ஏற்பட்டது. அப்பொழுது ஒரு குறிப்பிட்ட நபரை ஐந்து நேரமும் தொழ வைக்க வர வேண்டும் என்று நியமித்தார்கள்.
அப்பொழுது தான் ஒரு சிக்கல் ஏற்பட்டது.
இமாமத்திற்காக நியமிக்கப்பட்ட நபர் தங்கள் வாழ்வாதாரத்திற்கான தேடுதலில் ஈடுபட்டிருக்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் அவரால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் பணியை விட்டு விட்டு வந்தால் அவருக்கு நஷ்டம் ஏற்படும் நிலைமையும் ஏற்பட்டது.

ஜமாஅத்திற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்தால் தான் தொழுபவர்களில் பெரும்பாலானோர் பரபரப்பான வேலைகளுக்கிடையே ஜமாத்துடன் தொழ ஒரு குறிப்பட்ட நேரத்தை ஒதுக்கி,  வர முடியும்.

எனவே, தொழுபவர்களின் நன்மைக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் வந்து இமாமத் செய்ய ஒரு இமாமை நியமித்தார்கள். அவருடைய வாழ்வாதரங்களுக்காக பைத்துல் மாலிலிருந்து ஊக்க தொகையாக அவருக்கு தேவையான தொகையை நிர்ணயித்தார்கள்.
இந்த நடைமுறை
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது

இதற்கு வரலாற்றில் ஒரு முன்னுதாரணம் இருக்கிறது.

ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலிபா வாக நியமிக்கப்பட்ட மறுநாள் கடைத்தெருவிற்கு செல்வதை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பார்த்தார்கள்.
கலீபா அவர்களே! எங்கே செல்கிறீர்கள் என்று கேட்க, 'எனது வாழ்வாதாரத்திற்கான தேடுதலுக்கு செல்கிறேன் என்றார்கள்' அபூபக்கர் ஸித்திக் ரலியல்லாஹு அன்ஹு.

அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நீங்கள் முஸ்லிம்களின் அமீராக இருக்கின்றீர்கள். உங்களை தேடி எப்பொழுது வேண்டுமானாலும் வெகுஜன மக்கள் வருவார்கள். எனவே, நீங்கள் அவர்களுக்காக காத்திருப்பது அவசியாமாகும்.

உங்கள் குடும்ப செலவிற்காக தேவையான அளவு பைத்துல் மாலிலிருந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள்.
அபூபக்கர் ஸித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொடர்ந்து மற்ற கலிபாக்களும் அவ்வாறே தன குடும்ப செலவிற்காக பைத்துல் மாலில் பெற்று வந்தார்கள்.

இன்று கூட மக்கா ஹரமைனின் தலைமை இமாமாக பணியாற்றும் அஷ்ஷை்க் முனைவர் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுதேசி அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தொகை குறிப்பிடப்படாத ஒரு காசோலை மாதந்தோறும் அவருக்கு வழங்கப்பட்டு அந்த மாதத்திற்கு தேவையான பணத்தை அவர் எடுத்துக் கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே, இமாமுக்காக கொடுக்கப்படும் தொகை அவர் குறிப்பிட்ட நேரத்தில் மஸ்ஜிதிற்கு வந்து இமாமத் செய்வதற்காகவே தவிர அவர் தொழ வைப்பதற்காக அல்ல.
தொழுகைக்கான கூலியை அல்லாஹ் அல்லாத எவனாலும் கொடுக்க முடியாது.

இமாம் என்பவர் அவர் பின்னால் தொழுகின்றவர்களின் தொழுகைக்கு முழு பொறுப்பாகும்.

அவர் ஏதேனும் தவறு செய்து தொழுகை கூடாமல் போய்விட்டால் அதனால் ஏற்படும் பாவம் அந்த இமாமையே சேரும். அதே நேரம் அந்த தொழுகை சரிவர நிறைவேறி விட்டால் அந்த இமாமின் பின்னால் எவ்வளவு பேர் தொழுதார்களோ அவ்வளவு பேரின் நன்மைகளும் இமாமுக்கு சேரும்.

நிபந்தனை என்னவென்றால் அவருடைய எண்ணம் அல்லாஹ்விற்காக இருக்க வேண்டும்.

இன்றைய கால சூழ்நிலையில் ஒரு மஹல்லாவின் பல்வேறு கருத்துடையவர்கள், பல்வேறு இயக்கங்களை சார்ந்தவர்கள், பல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், ஒரு மஸ்ஜிதிற்கு வந்து அந்த மஸ்ஜிதின் நிர்வாகம் அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஜமாஅத்தாக தொழுவதற்கு அந்த இமாமே காரணமாக இருக்கிறார்.

அந்த இமாம் கடுங்குளிரிலும், கொட்டும் மழையிலும், கடுமையான வெயிலாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் மஸ்ஜிதிற்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இமாமின் சேவையை குறைத்து மதிப்பிட்டு அவர் கூலி வாங்கி கொண்டார் மறுமையில் எப்படி கூலி கிடைக்கும் என்று கேட்பது அறியாமையாகும்.

அதே போன்று, அரபி மதரஸாக்களில் பணியாற்றும் ஆலிம் பெருந்தகைகளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மதரஸாவிற்கு வந்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக தரும் ஊக்க தொகையே தவிர அவர்களுக்கு உள்ள கூலியல்ல.

தேவ்பந்த் பல்கலைக்கழகத்தில் தலைமை ஆசிரியராக இருந்த ஹுஸைன் அஹ்மத் மதனி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அரசியலிலும் ஈடுபட்டு இருந்ததால் அடிக்கடி விடுமுறை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், மாணவர்களுக்கு கற்று தர வேண்டிய பாடங்களை விடுமுறை நாட்களிலும் இரவு நேரங்களிலும் நடத்துவார்கள். இருப்பினும், அந்த மாதத்திற்கான ஊதியத்தை பெறும் போது விடுமுறை எடுத்த நாட்களுக்குண்டான ஊதியத்தை குறைத்துக் கொள்வார்கள்.

நீங்கள் தான் இந்த கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தை முடித்து விடுகிறீர்களே! அவ்வாறு இருக்கும் போது ஏன் விடுமுறைக்கான ஊதியத்தை குறைத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்ட போது எனக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறிப்பிட்ட நேரத்தில் வருவதற்காகவே தவிர கற்றுக் கொடுக்கும் கல்விற்காக அல்ல. என்றார்கள்.

எனவே, ஆலிம் பெருமக்கள் வாங்கும் ஊதியமும் இமாம்கள் வாங்கும் ஊதியமும் அவர்கள் ஆற்றும் பணிக்கான ஊதியம் அல்ல.

இன்று சிலர், சரியான ஊதியம் கொடுக்காத நிர்வாகத்தை எதிர்த்து ஏன் ஆலிம்கள் வேலை நிறுத்தம் செய்யக் கூடாது என்று கேட்கும் பொழுது ஆலிம் பெருமக்கள் சொல்லும் பதில் இது தான்.

நாங்கள் தொழ வைப்பது அல்லாஹ்விற்காகவே தவிர ஊதியத்திற்காக அல்ல என்று கூறி அந்த யோசனையை நிராகரிக்கிறார்கள்.

மஸ்ஜிதில் தொழ வைக்க இமாம்கள் இல்லையென்றால் ஒரு மஹல்லா ஜமாஅத் முறையாக இயங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களில் தாயிஇகளாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு
மாத ஊதியமும் வழங்குகிறார்கள் அதனால் அவர்கள் செய்யும் இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு அல்லாஹ் விடம் கூலி இல்லையென்று சொல்லமுடியுமா?
--------கணியூர் இஸ்மாயீல் நாஜி
May 1