Tuesday, December 19, 2017

போராட்டங்கள் தோல்வியடைவது ஏன்?

போராட்டங்கள் தோல்வியடைவது ஏன்?
********************************************
  மதரஸாவில் கல்வி கற்கும் போதும்,உஸ்தாதாக பணியாற்றும் போதும்  நான் படித்ததில் பிடித்ததை எழுதிவைக்கும் வழக்கமுண்டு. ஏறக்குறைய முப்பது,நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அந்த கையெழுத்துப்பிரதிகள் பல கரையான்களால் அழிக்கப்பட்டுவிட்டன.
இன்றும் பல கிதாபுகளும் ,நோட்டுபுக்குகளும் சற்று சிதிலமடைந்த நிலையில் கைவசம் இருக்கின்றன.
  இன்று வேறொரு கிதாபைத் தேடும்போது ஒரு குறிப்பு புத்தகம் கிடைத்தது. அதில் பல ஹிகாயத்கள்,சம்பவங்கள் படிக்க சுவையாக இருந்தன.
   அதில் ஒரு கதை தான் இது,
      அக்காலத்தில் ஒரு வணக்கசாலி இருந்தார். ஒரு ஊரில் மக்கள் ஒரு மரத்தை வணங்குவதை அறிந்து  அதை வெட்டி வீழ்த்த கோடலியுடன் சென்றார்.
    அந்த மரத்தை வைத்து வருமாணம் ஈட்டும் பூசாரி அதை வெட்ட விடாமல் தடுத்தான். இருவருக்கும் சண்டை நடந்தது.
அதில் வணக்கசாலி வெற்றி பெற்று கோடலியால் மரத்தை வெட்ட ஆரம்பித்தார்.
    அருகே  வந்த பூசாரி சற்று நான் சொல்வதை கேளுங்கள்.
இந்த மரத்தை நீங்கள் வெட்டினாலும் ,நான் வேறொரு மரத்தை வைத்து மக்களை வணங்கச்செய்வேன். உங்களால் எத்தனை மரத்தை வெட்ட முடியும். உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது, வறுமையில் வாடுவதைப் போல் தெரிகிறது, உங்களுக்கு நான் தினந்தோறும் காலை இரண்டு தினார் உங்கள் வீட்டு வாசலில் வைத்து விடுகிறேன், நீங்கள் திரும்பிப்போங்கள் எனச்சொன்னான்.
   ஷைத்தானின் வலையில் விழுந்த வணக்கசாலி  மரத்தை வெட்டாமல் திரும்பி விட்டார்.
  பூசாரி சொல்லிய வண்ணம் தினந்தோறும் தினார்கள் வந்து கொண்டிருந்தன.
    சில நாட்கள்  சென்ற பின் தினார்கள் வருவது நின்று போனது கோபமடைந்த வணக்கசாலி பூசாரியிடம்  சென்று கேட்க அவன் திமிராக இனிமேல் கொடுக்க முடியாது என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள் என்றான்.
   ஆத்திரமடைந்த வணக்கசாலி கோடலியை எடுத்துக்கொண்டு மரத்தை வெட்ட முயன்றார், பூஜாரி தடுக்க இருவரும் சண்டை இட  இம்முறை பூஜாரி வெற்றி பெற்றான்.,
       வியப்படைந்த வணக்கசாலி அன்று தோற்றுப்போன நீ   இன்று எப்படி வென்றாய்? என கேட்டார்.
     அதற்கு பூஜாரி சொன்னான்:
     அன்று நீ சண்டையிட்டது சத்தியத்திற்காக, இன்று நீ சண்டையிட்டது தீனாருக்காக எனவே நீ தோல்வியுற்றாய்"
என்றான்.
     இந்த நிகழ்வு கதையாக இருக்கலாம்,ஆனால் அது சொல்லவரும் நீதி சிந்திக்கத்தக்கது.
    சத்தியத்தை நிலைநாட்ட நடைபெறும் போராட்டத்தால் உடனடியாக வெற்றி கிடைக்காவிட்டாலும்,அது மக்கள் மத்தியில்  மெதுவாக தாக்கத்தை ஏற்படுத்தி ஒருநாள் வெற்றிபெரும்.
   ஆனால் இவ்வுலக ஆதாயத்தைப் பெறும் நோக்கோடு நடைபெறும் போராட்டங்களால்  அசத்தியத்தை ஒரு நாளும் வீழ்த்த முடியாது.
     ---**-கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ,தேவ்பந்தி.

Wednesday, December 13, 2017

பெண் பிள்ளைகள்

எனக்காக கதவை திறப்பவள் இவள்தான்
ஒரு குட்டிக் கதை
**************************
புதிதாக  திருமண அந்த இளம்ஜோடி
ஒருநாள் "இன்று முழுவதும் நாம் யாரையும்
சந்திக்காமல் தனியாக இன்றைய நாளை கழிப்போம்,
யார் வந்து கதவைத்தட்டினாலும் எந்த பதிலும்
சொல்லாமல் மவ்னமாக இருந்துவிடுவோம்"என முடிவு செய்தனர்.
   
சற்று நேரத்தில் கணவனின் பெற்றோர் வந்து கதவைத்
தட்டினர்.கணவன் மனைவியைப் பார்த்தான்.
மனைவி நம் முடிவின்படி கதவைத் திறக்கக்கூடாது என கிசுகிசுத்தாள். கணவன் அமைதியாக இருந்துவிட்டான்.
பெற்றோர் திரும்பிச் சென்று விட்டனர்.

   கொஞ்சநேரத்தில மீண்டும் கதவைத்தட்டும் சத்தம் கேட்டது, இம்முறை மனைவியின் பெற்றோர்.
    கணவன் மனைவியைப் பார்த்தான்,அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியதைக் கண்டு பதறிப் போய் "என்னம்மா என்னாச்சு" என்றான்,
     என் நல்வாழ்விற்காக எவ்வளவோ தியாகம் செய்த என் பெற்றோர்களை என்னை பார்க்காமல் திருப்பி அனுப்புவதை எண்ணி மனம் கலங்குகிறது"என்றாள் மனைவி.
    மனமுருகிய கணவன் அழாதே! நம் முடிவை கைவிட்டு உன் பெற்றோரை அனுமதிப்போம் என்று கூறியவாறு கதவைத் திறந்தான்.
    ஆண்டுகள் பல கடந்தன. அடுத்தடுத்து நான்கு ஆண்குழந்தைகள் பிறந்தன.
ஐந்தாவதாக பெண்குழந்தை பிறந்தது .கணவன் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தான்.
   ஊர்மக்கள் அனைவரையும் அழைத்து பெரியளவில் விருந்தளித்தான்,
      வந்திருந்த மக்கள், "நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றபோது ஏற்படாத பெருமகிழ்ச்சி ஒரு பெண் பிள்ளை பெற்றவுடன் ஏற்பட்டது ஏன்? என வினவினர்..
      கணவன் சொன்னான்:
இந்த செல்லப்பெண்தான் எங்களது வயதான காலத்தில் எங்களுக்காக தனது வீட்டு வாசற்கதவைத் திறப்பவள்"
------- அரபு சிறுகதை. தமிழில் கணியூர் இஸமாயீல் நாஜி பாஜில்மன்பஈ,தேவ்பந்தி

Sunday, December 10, 2017

குர்ஆனின் வாரத்தைகள் இறைவனுடையதா?

குர்ஆனின் வார்த்தைகள் இறைவனுடையதா?
முஹம்மது நபி(ஸல்) அவர்களுடையதா?
------அல்லாமா இக்பால் அவர்களிடம் கேட்கப்பட்ட
கேள்வி.
******************************************************
     லாஹூர் கிருத்துவ கல்லூரி யில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு கவிஞர் அல்லாமா இக்பால் அழைக்கப்பட்டிருந்தார்.
விழாவின் முடிவில் கல்லூரி முதல்வர் கவிஞரை தனியே அழைத்து என்னுடைய கேள்விக்கு அறிவுபூர்வமாக பதில் சொல்லுங்கள் என ஆரம்பித்து ,
#உங்கள் முஹம்மத் நபிக்கு  உங்கள் இறைவன் குர்ஆனின் கருத்துகளை அவர்களின் உள்ளத்தில் உதிக்கச்செய்து அக்கருத்திற்கு பொருத்தமான   வார்த்தைகளை  முஹம்மதுநபி அமைத்துக்கொண்டார்களா?
இல்லை,கருத்துகளும்,அரபிவார்த்தைகளும் இறைவனால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டதா?"எனக்கேட்டார்.

   சற்றும் யோசிக்காமல், "கருத்தும்,வார்த்தைகளும்,வாக்கியங்களும் இறைவனால் நபியவர்களுக்கு அருளப்பட்டவை என பதிலளித்தார் கவிஞர்.

வியப்புடன் அவரைப் பார்த்த கல்லூரி முதல்வர் "என்ன கவிஞரே! நீங்கள் எவ்வளவு பெரிய அறிஞர்,கவிஞர்,சிந்தனையாளர் அப்படிப்பட்ட நீங்கள் அடிப்படை ஆதராமில்லாத ஒரு செய்தியை எப்படி நம்புகிறீர்?
அவ்வாறு நம்புவதற்கு என்ன ஆதாரம்? எனக்கேட்டார்.
     எனது கவிதைகள்தான் ஆதாரம் என்ற   கவிஞர் "  நான் ஒரு மனிதன்,கவிஞன் எனக்கு  கவிதை எழுதும் மனநிலை  ஏற்படும் தருணங்களில்  என் உள்ளத்தில் கவிதைக்கான கருவும்,அதை ஆழமாக வெளிப்படுத்தும் சொற்களும் வெள்ளமென பெருகும்
நான் அவைகளை எழுத்தில் கொண்டு வருவேன்.எழுதி முடித்தபின் கவிதையின் சொற்களில் ஏதேனும்  மாற்றம் செய்யலாமா? என பல முறை முயற்சிசெய்திருக்கிறேன்.ஆனால் முதலில் எனதுள்ளத்தில் ஏற்பட்ட அந்த சொல்லிற்கிணையான வேறு சொல்லை என்னால் அந்த இடத்தில் அமைக்க இயலவில்லை. அப்பொழுது நான் நினைத்துக் கொள்வேன் இதுதான் இறைவன் விரும்பும் சொல் என.
     என்னைப் போன்ற ஒரு கவிஞனின் உள்ளத்திலேயே ஒரு கவிதைக்கான வார்த்தைகளை-சொற்களை இறைவன் தேர்ந்தெடுத்து அவன் உள்ளத்தில் உதிக்கச் செய்யும் பொழுது 
மக்களுக்கு நேர்வழிகாட்ட இறைவன் அனுப்பிய இறுதி தூதர் முஹம்மது நபி ﷺ  அவர்களுக்கு அருளப்பட்ட இறுதி வேதமான குர்ஆனின் வார்த்தைகள் மட்டும் இறைவனின் வார்த்தைகளாக இல்லாமலிருக்குமா?"
என்றார்கள் அல்லாமா இக்பால்(ரஹ்)
    கல்லூரி முதல்வர் வாயடைத்துப் போய் நின்றார்.
       ------------Islamic Movement(urdu) Fortnighty April,May 1984
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ ,தேவ்பந்தி
  ------

Saturday, December 2, 2017

اتمام الصفوف

https://islamqa.info/ar/158560