Tuesday, December 19, 2017

போராட்டங்கள் தோல்வியடைவது ஏன்?

போராட்டங்கள் தோல்வியடைவது ஏன்?
********************************************
  மதரஸாவில் கல்வி கற்கும் போதும்,உஸ்தாதாக பணியாற்றும் போதும்  நான் படித்ததில் பிடித்ததை எழுதிவைக்கும் வழக்கமுண்டு. ஏறக்குறைய முப்பது,நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அந்த கையெழுத்துப்பிரதிகள் பல கரையான்களால் அழிக்கப்பட்டுவிட்டன.
இன்றும் பல கிதாபுகளும் ,நோட்டுபுக்குகளும் சற்று சிதிலமடைந்த நிலையில் கைவசம் இருக்கின்றன.
  இன்று வேறொரு கிதாபைத் தேடும்போது ஒரு குறிப்பு புத்தகம் கிடைத்தது. அதில் பல ஹிகாயத்கள்,சம்பவங்கள் படிக்க சுவையாக இருந்தன.
   அதில் ஒரு கதை தான் இது,
      அக்காலத்தில் ஒரு வணக்கசாலி இருந்தார். ஒரு ஊரில் மக்கள் ஒரு மரத்தை வணங்குவதை அறிந்து  அதை வெட்டி வீழ்த்த கோடலியுடன் சென்றார்.
    அந்த மரத்தை வைத்து வருமாணம் ஈட்டும் பூசாரி அதை வெட்ட விடாமல் தடுத்தான். இருவருக்கும் சண்டை நடந்தது.
அதில் வணக்கசாலி வெற்றி பெற்று கோடலியால் மரத்தை வெட்ட ஆரம்பித்தார்.
    அருகே  வந்த பூசாரி சற்று நான் சொல்வதை கேளுங்கள்.
இந்த மரத்தை நீங்கள் வெட்டினாலும் ,நான் வேறொரு மரத்தை வைத்து மக்களை வணங்கச்செய்வேன். உங்களால் எத்தனை மரத்தை வெட்ட முடியும். உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது, வறுமையில் வாடுவதைப் போல் தெரிகிறது, உங்களுக்கு நான் தினந்தோறும் காலை இரண்டு தினார் உங்கள் வீட்டு வாசலில் வைத்து விடுகிறேன், நீங்கள் திரும்பிப்போங்கள் எனச்சொன்னான்.
   ஷைத்தானின் வலையில் விழுந்த வணக்கசாலி  மரத்தை வெட்டாமல் திரும்பி விட்டார்.
  பூசாரி சொல்லிய வண்ணம் தினந்தோறும் தினார்கள் வந்து கொண்டிருந்தன.
    சில நாட்கள்  சென்ற பின் தினார்கள் வருவது நின்று போனது கோபமடைந்த வணக்கசாலி பூசாரியிடம்  சென்று கேட்க அவன் திமிராக இனிமேல் கொடுக்க முடியாது என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள் என்றான்.
   ஆத்திரமடைந்த வணக்கசாலி கோடலியை எடுத்துக்கொண்டு மரத்தை வெட்ட முயன்றார், பூஜாரி தடுக்க இருவரும் சண்டை இட  இம்முறை பூஜாரி வெற்றி பெற்றான்.,
       வியப்படைந்த வணக்கசாலி அன்று தோற்றுப்போன நீ   இன்று எப்படி வென்றாய்? என கேட்டார்.
     அதற்கு பூஜாரி சொன்னான்:
     அன்று நீ சண்டையிட்டது சத்தியத்திற்காக, இன்று நீ சண்டையிட்டது தீனாருக்காக எனவே நீ தோல்வியுற்றாய்"
என்றான்.
     இந்த நிகழ்வு கதையாக இருக்கலாம்,ஆனால் அது சொல்லவரும் நீதி சிந்திக்கத்தக்கது.
    சத்தியத்தை நிலைநாட்ட நடைபெறும் போராட்டத்தால் உடனடியாக வெற்றி கிடைக்காவிட்டாலும்,அது மக்கள் மத்தியில்  மெதுவாக தாக்கத்தை ஏற்படுத்தி ஒருநாள் வெற்றிபெரும்.
   ஆனால் இவ்வுலக ஆதாயத்தைப் பெறும் நோக்கோடு நடைபெறும் போராட்டங்களால்  அசத்தியத்தை ஒரு நாளும் வீழ்த்த முடியாது.
     ---**-கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ,தேவ்பந்தி.

No comments:

Post a Comment