Monday, August 29, 2022

தந்தையானாலும் தம்பதியர் சண்டையில் தலையிடாதீர்

தந்தையே ஆனாலும் தம்பதியர் சண்டையில் தலையிடாதீர்.
----------
அன்னை பாத்திமா (ரழி)அவர்கள் வீட்டிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள்.
அலீ(ரழி) அவர்கள் எங்கே? எனக்கேட்க
எனக்கும் அவருக்கும் ஒரு பிரச்சனையில் என்னை கோப்படுத்திவிட்டார்.
பின் மதிய ஓய்வெடுக்காமல் வெளியே சென்றுவிட்டார் என்றார் பாத்திமா(ரழி)

ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் எங்கே எனத்தேடுமாறு ஒரு நபரை அனுப்ப ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் பள்ளிவாசலில்  படுத்திருப்பாக தகவல் தந்தார்.

நபியவர்கள் அங்கே சென்றார்கள்

 மேலாடை நழுவி தரையில் கிடக்க ஒருக்களித்து தரையில் ஹஜ்ரத் அலி(ரழி) படுத்திருந்தார்கள்.
நபியவர்கள் ஹஜ்ரத் அலி(ரழி) அவர்களின் உடம்பில் படிந்திருந்த மண்ணைத் தட்டிவிட்டவாறே 
யா அபா துராப்! கும்
#மண்ணின்_மைந்தரே எழுந்திரும் என்றார்கள்.
ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் பின்னாளில் தன்னை அபூதுராப் என அழைப்பதை பெரிதும் விரும்பினார்கள்(புகாரி6280)

இந்த சம்பவத்தில் பல படிப்பினைகள் இருக்கின்றன.

1.மதியம் ஓய்வெடுக்கும் வேளையில் மகள் வீட்டிற்கு தந்தை முன்னறிவிப்பின்றி செல்லலாம்

2.மகளைச் சந்திக்க தந்தைக்கு கணவனின் அனுமதி தேவையில்லை.

3.மனைவி கோபமடைந்ததை அறிந்தவுடன் மேலும் விவாதம் செய்து பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் கோபம் தீர்ந்தவுடன் பேசலாம் என அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றது ஸய்யித்னா அலி அவர்களின் சகிப்புத்தன்மையைக் காட்டுவதுடன் மனைவி கோபமடைந்தால் கணவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவதாகவும் இருக்கிறது.

 4.மதியம் வேளையில் பள்ளிவாசலில் படுத்துறங்கலாம்.

5. எனக்கும் கணவருக்குமிடையே பிரச்சினை என்று பாத்திமா அவர்கள் சொன்னபோது என்ன பிரச்சனை  என மகளிடமோ மருமகனான அலி(ரழி) அவர்களிடமோ நபியவர்கள் கேட்கவில்லை.
இதிலிருந்து கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனையில் பெற்றோர் வலியச் சென்று நுழைவது 
பண்பல்ல, நபிவழிக்கு மாற்றம் என்று புரிகிறது.

6.மகளை கோபப்படுத்திய நிலையிலும் மறுமகன்  ஹஜ்ரத் அலி(ரழி) அவர்களின் முதுகில் இருந்த மண்ணை பாசமுடன் தட்டிவிட்டது,
ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் மீது நபியவர்கள் எவ்வளவு பாசம் வைத்திருந்தார்கள் என்பது தெரிகிறது.

7.ஹஜரத் அலி அவர்களை மண்ணின் மைந்தா என செல்லப் பெயர் வைத்து அழைத்ததும் அதை பெருமிதத்துடன் ஹஜ்ரத் அலிஅவர்கள் ஏற்றுக் கொண்டதிலிருந்து நமக்குப் பிரியமானவர்களை அவர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் செல்லப் பெயர் வைத்து அழைப்பது விரும்பத்தக்கது எனத் தெளிவாகிறது. 
-----கணியூர் முஹம்மது இஸ்மாயீல் நாஜீ பாஜில் மன்பயி

Friday, August 26, 2022

ஹக், ஸித்க் வித்தியாசம் என்ன?

மீள் 
ஹக்,حق சித்க் صدق  என்ன வித்தியாசம்?
******************-*----******
கூத்தாநல்லூர் மதரஸா மன்பவுல் உலா வில் நான்காவது ஜும்ரா ஓதினேன்.அங்கு கண்ணியத்திற்குறிய என் உஸ்தாத் பெருந்தகை கம்பம் அப்துல் கனி ஹஜரத் அவர்களிடம்  شرح  التهديب
என்ற மன்திக் (தர்க்கக் கலை)கிதாப் வகுப்பில்

ஹக் ,ஸித்க் இரண்டிற்கும் உண்மை என்று பொருள் கொள்கிறோம்
இரண்டிற்கும் என்ன வித்தியாசம்
எனக் கேட்டேன்.
அதற்கு  அவர்கள் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கினார்கள்.

    உன்னை பெரிய ஹஜரத் அழைத்து அப்துல் கனிஹஜரத் அறையில் இருக்கிறாரா  பார்த்து வா என்கிறார்.
நீ வருகிறாய்.

என் அறையின் கதவு சாத்தியிருக்கிறது
 எனது   காலணி வெளியே இருக்கின்றது
 நான் உள்ளே இருப்பதாக நம்பிக்கொண்டு பெரிய ஹஜரத் திடம் ஹஜரத் அறையில் இருக்கிறார்"
எனச் சொல்கிறாய்.
 
 ஆனால்   உண்மை என்னவென்றால் காலணியின் வார்  அறுந்து விட்டதால் நான் வேறு காலணியை அணிந்து கொண்டு வெளியே சென்றுவிட்டேன்.

 நான் அறையில் இல்லை என்பதுதான்
உண்மை நிலை
எது உண்மை நிலையோ  அதை  ஹக் என்று சொல்லப்படும் 

அதே நேரத்தில் நான் இருக்கிறேன் என நம்பிக்கொண்டு நீ சொன்னது ஹக்கிற்கு மாற்றமாக இருந்தாலும் அதை பொய் எனச் சொல்லமுடியாது  ஏனென்றால் உன்னைப் பொறுத்தவரை அது உண்மை .

#சித்க் என்பது  ஒருவனின் உள்ளத்திலுள்ளதையே உதட்டால் மொழிவது
  அதாவது உள்ளத்திலுள்ளதும் உதட்டிலிருந்து வெளிவரும் வார்த்தைகளும் ஒன்றாக இருந்தால் அது ஸித்க் அவன் சாதிக் உண்மையாளன்.

உள்ளமும் உதடும் மாறுபட்டால் அது கித்ப்
அவன் பொய்யான்.

உதரணமாக நான் அறையில் இருப்பதாக நீ நினைக்கிறாய் ஆனால் நான் இருப்பதாக பெரியஹஜரத்திடம் சொன்னால் மீண்டும் ஹஜரத்திடம் போய் இதை வாங்கிவா என அனுப்புவார் எனவே இல்லைஎனச் சொல்லிவிடுவோம் என எண்ணி பெரிய ஹஜரத்திடம் ஹஜரத் இல்லை எனச் சொல்கிறாய்  நான் அறையில் இல்லை என நீ சொல்வது ஹக்.ஆனாலும் நீ பொய்யன் ஏனென்றால் உன் உள்ளத்தில் நான் இருப்பதாக நம்பிக்கொண்டு உதட்டளவில் இல்லை என்று சொல்கிறாய் எனவே நீ பொய் சொல்கிறாய் நீ பொய்யன் எனச் சொல்லப்படும்.

     ஹக் حق என்பது நிகழ்வுகளுடன்(واقع) தொடர்புடையது.
சித்க்(صدق) என்பது ஒருவருடைய (قول)பேசுவதுடன் தொடர்புடையது.
பல மணித்துளிகளில் விளக்கவேண்டியதை ஒரு உதாரணத்தின் மூலம் மிக எளிதாக விளக்கினார்கள்.
ஹஜரத் அவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தை அருள்வானாக!

----கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ.

Tuesday, August 2, 2022

சோதனைகள் தாம் உனது உயர்வுக்கு அடித்தளமிடுபவை

சோதனைகள் தாம் உனது உயர்வுக்கு அடித்தளமிடுபவை.
-இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்)
****************
வாழ்க்கையில் பல துன்பங்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டவர்கள் இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள்.
அவர்களிடம் சோதனைகள் உங்கள் வாழ்க்கைப்பாதையில் தடைகளாக இல்லையா ? எனக்கேட்கப்பட்டது.
    இமாம் சொன்னார்கள்:
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக துன்பங்கள் ஏற்படவில்லையென்றால் நான் வழியிலேயே சந்தேகப்பட்டு நின்றிருப்பேன்.
  அல்லாஹ் உம்மை ஏதாவது ஒன்றைக்கொண்டு சோதிப்பதில்லை,அது உனக்கு நன்மையாக மாறுவதற்காகவே தவிர. நீ அதை நேரெதிராக  எண்ணினாலும் சரியே.
உன் உள்ளத்தை அமைதிப்படுத்து.
நபி  யூசுப்(அலை)அவர்களுக்கு சோதனை ஏற்படாமல் இருந்திருந்தால்  அவர்  தனது தந்தையின் செல்லப்பிள்ளையாக அவரருகேயே இருந்திருப்பார். மாறாக
நபி அவர்கள்அச் சோதனைகளின் காரணமாகவே
எகிப்து நாட்டின் அதிபராக மாறினார்
நபி மூஸா(அலை) அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உதவி செய்வோர் யாருமின்றி நாட்டை விட்டு சென்றவர்கள் நபியாக அந்த நாட்டிற்கு திரும்பினார்கள்.
தான் நேசித்த மக்காவைவிட்டு மனவேதனையுடன் வெறுத்து வெளியேறிய நமது நபி முஹம்மது(ஸல்)அவர்கள் மக்காவை வென்றெடுத்தவராக உள்ளே நுழைந்தார்கள்.
  இந்நிகழ்வையெல்லாம் அறிந்த பின்னும் மனஅழுத்தத்துடன் இருப்பீரா?
 மன உறுதியுடன் இருங்கள்.
உங்களின் பொறுமைக்குப்பின் அழகான பல நற்செய்திகள் உங்களுக்காக காத்துக்கிடக்கின்றன.
அவைகள் இப்பொழுது நீங்கள் அனுபவிக்கும் துன்பத்தினால் ஏற்படும் வேதனைகளை மறக்கடிக்கச்செய்யும்.

   - அரபி டுவிட்டரிலிருந்து 
கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ,தேவ்பந்தி.