Tuesday, October 26, 2021

நபித்தோழர்களின் சிறப்பு


நபித் தோழர்களின் சிறப்பு
*******************
  அய்யாமுல் ஜாஹிலியா எனப்படும் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அனைவரும் ஒழுக்கங்கெட்டவர்களாக வாழ்ந்தவர்கள் என எண்ணுவது அறிவீனம்.

ஒழுக்கக்கேடுகள் பரவலாக அக்காலத்தில் காணப்பட்டாலும் அவைகளைத் தவிர்த்தும் பலர் வாழ்ந்திருக்கிறார்கள்.

பெண் குழந்தை பிறந்தால் உயிருடன் குழிதோண்டி புதைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அக்காலத்தில் வாழ்ந்த எல்லோரும் அவ்வாறு செய்திருந்தால் மணமுடிக்க பெண்களே இல்லாமல் போயிருப்பார்கள்.

அக்காலத்தில் வாழ்ந்த பல்லாயிரம் பேர்களில் நூற்றுக்கணக்கான பேர் நபியவர்களின் அழைப்பை ஏற்று உடனடியாக நபியவர்களின் நுபுத்துவத்தை ஏற்றுக்கொண்டார்கள்,
அக் கொள்கைக்காக தங்களின் உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் தியாகம் செய்ய தயாரானார்கள் என்றால் அவர்களுக்கு இயற்கையிலேயே நல்லவற்றை ஏற்றுக்கொள்ளும் பண்பு இருந்திருக்கிறது என்று பொருள்.

   புகாரிஷரீபிலும்,முஸ்லிம் ஷரீபிலும் வரும் நபிமொழிகள இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றன
"அரபுகளின் (பரம்பரைகளான) சுரங்கங்களைப் பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா? மக்கள் சுரங்கங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும் போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்' என்று பதிலளித்தார்கள்
புகாரி 3383
 عَنْ أَبِي هُرَيْرَةَ، بِحَدِيثٍ يَرْفَعُهُ، قَالَ: «النَّاسُ مَعَادِنُ كَمَعَادِنِ الْفِضَّةِ وَالذَّهَبِ، خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقُهُوا
"

தங்கம்வெள்ளி கனி மங்களைப் போன்று மனிதர்களும் கனிமங்கள் தாம்.
அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும் போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்' முஸ்லிம் 2638அரபி பதிப்பு 
தங்கம்,வெள்ளி போன்ற கனிமங்கள் எந்த நிலைமையிலும் தங்கள் இயல்பிலிருந்து மாறிவிடாது, அவைகள் மண்ணில் புதைந்திருந்தாலும் அவைகள் புழுதியடைந்து ஒளி குன்றுமே தவிர அதனின் அடிப்படைத் தன்மை மாறாது  மண்ணில் கிடந்ததை எடுத்து புடம் போட்டால் அது சொக்கத்தங்கமாக மாறிவிடும்.
அதைப்போன்று தான் நபித்தோழர்கள் தங்கமாகவும்,வெள்ளியாகவும் மூட நம்பிக்கைகளால் ஒளிஇழந்தவர்களாக அறியாமை காலத்தில் இருந்தார்கள் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றவுடன் நபிஅவர்கள் குர்ஆனின் ஜோதியால் புடம் போட்டு அவர்களை சிறந்த,நேர்மைமிக்க உலகமாந்தர்களின் மனங்களை
 வென்றெடுக்கும் வகையில் வெளிப்படுத்தினார்கள.
குர்ஆன் வாழ்க்கை நெறிகளாக-மது,வட்டி,
தகாத உறவு களை  விட்டும் விலகுமாறு ஆணையிட்ட போது  விவாதங்களில் ஈடுபடாமல் செவிமெடுத்தோம்,கட்டுப்பட்டோம் என வாழ்ந்து அல்லாஹ் விற்கு உவப்பான வர்களாக மாறினார்கள். 
நபித்தோழர்களை நேசிப்பது  ஈமானில் ஒரு பகுதி" என நபிபெருமான்ﷺ அவர்கள் நவின்றதையும் நினைவில் கொள்ளுங்கள்.
    சிலர் தாங்கள் செய்த தவறை நியாயப்படுத்த நபித்தோழர்களே ஒரு காலத்தில் தவறு செய்தவர்கள்தான் எனக் கூறுபவர்களுக்கான பதிவு இது.
----கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில்மன்பயீ

Friday, October 8, 2021

பெருமானார் அவர்களின் மீது நாம் வைத்துள்ள பேரன்பு எத்தகையது?

பெருமானார் ﷺ அவர்களின் மீது நாம் வைத்துள்ள பேரன்பு எந்த வகையைச் சேர்ந்தது?
 ------ கணியூர் இஸ்மாயீல் நாஜி யின் ஜும்மா உரை(15/11/2019)
-----------------------------     
       "உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் உண்மையான முஃமினாக ஆகமாட்டார்"என அண்ணல்நபிﷺஅவர்கள் நவின்றுள்ளார்கள்.

       ஒருவரின் மீது நாம்வைக்கும் அன்பு பல காரணத்தினால் ஏற்படலாம்.
 இந்த நபிமொழி நம்மைப் பெற்றெடுத்த தந்தையை விட,நாம் ஈன்றெடுத்த பிள்ளைகளை விடவும் நபி அவர்களின் மீது அன்பு கொள்ளவேண்டும் எனக் கூறுகிறது.

      தந்தையின் மீதும்,பிள்ளைகளின் மீதும் நமக்கேற்படும் பாசம் இயல்பானது. நம்மையறியாமலேயே ஏற்படுவது. அதற்கு அரபியில் '#ஹுப்புத்தபஈ' என்பார்கள்.

      அத்தகைய அன்பை நம்மால் அண்ணலாரின் மீது வைக்க முடியுமா?
முடியும் என நபித்தோழர்களின்  செயல்கள் நமக்குக் காட்டுகின்றன.

      புகாரி ஷரீபில் வருகிறது. நபித் தோழர் #அபுதல்ஹா(ரழி) சொல்கிறார்,கைபர் போர் முடிந்து நபிபெருமான்ﷺ அவர்களும்,அவர்களின் துணைவியார் #ஸபிய்யா(ரழி) அவர்களும் ஒரு ஒட்டகத்தில் எனக்கு முன் சென்று கொண்டிருந்தார்கள். நான் வேறொரு ஒட்டகத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தேன். திடீரென ஒட்டகம் காலிடரி கீழே சாய நபிஅவர்கள் ஒருபக்கமும்,துணைவியார் சற்றுத் தள்ளியும் கீழே விழுந்தார்கள்.

   இதைப் பார்த்த நான் பதறிப் போய் என்னையறியாமலேயே நபிஅவர்கள் விழுந்ததைப் போன்றே பூமியில் நானும். விழுந்தேன். (அதாவது என் ஒட்டகத்தை நிறுத்திகீழே இறங்க முற்படாமல் நபியவர்கள் விழுந்ததைப் போன்றே கீழே விழுந்தேன்)
     அண்ணலாரின் அருகே சென்று 'காயம் ஏதேனும் ஏற்பட்டதா நபியவர்களே என்று கேட்டேன்.
நபியவர்கள், ஸபிய்யா அவர்களைப் பார் என்று சொன்னார்கள்.

#அபுதல்ஹா ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். 'நான் என் முகத்தை துணியால் மூடிக்கொண்டு அன்னையின் அருகில் சென்றேன். அந்த துணியால் அவர்கள் முகத்தை மூடி அவர்கள் கரங்களை பிடித்து மேலே தூக்கினேன். 

இந்த நிகழ்வு நபித்தோழர்கள் எந்த அளவு நபியவர்கள் மீது நேசம் கொண்டிருந்தார்கள் என்று புரிகிறது.

நபித்தோழர்கள், தம் பிள்ளைகளிடம் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்வதற்கு முன்னால் நபியவர்களுக்கு அடுத்து என் நேசத்திற்குரியவன் நீ என்று சொல்வார்களாம்.

#ஹஜ்ரத்_உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நபியவர்களே! இந்த உலகத்தில் என் பெற்றோர், என் குழந்தைகள், மற்ற அனைவரையும் விட உங்களை அதிகமாக நேசிக்கிறேன். ஆனால், என்னை நான் உங்களை விட அதிகமாக நேசிக்கிறேன் என்றார்.

" லா யா உமர்" முடியாது உமரே உங்களை விடவும் என்னை அதிகமாக நேசித்தால் தான் உண்மை முஃமினாக முடியும் என்றார்கள் நபியவர்கள்

சற்று நேரம் யோசித்த உமர் அவர்கள், இப்போது சொல்கிறேன் நபியவர்களே! என்னை விடவும் உங்களை அதிகமாக நேசிக்கிறேன்".

"அல்ஆன யா உமர்" இப்போது தான் உமரே நீங்கள் உண்மையான முஃமீன் என்றார்கள் நபியவர்கள்.

#உவைஸ் கர்ணி அவர்கள் உஹது போரில் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் பல் ஷஹீதாக்கப்பட்டு விட்டது என்ற செய்தியை கேட்டவுடன் எந்த பல் என்று தெரியாத காரணத்தால் தனது எல்லா பற்களையும் உடைத்துக் கொண்டார்களாம்.

இது நமக்கு பைத்தியக்காரத்தனமாக தெரியலாம். ஆனால் ஒருவர் மீது நாம் கொண்டிருக்கின்ற பேரன்பு அறிவிற்கு அப்பாற்பட்டது. 

 ஒன்றை நேசிப்பதற்கு  அழகும் ஒரு காரணம்.
அழகான குழந்தையைப் பார்த்தால், நமக்கு அந்த குழந்தையின் மீது அன்பு ஏற்படுகிறது.

அழகிற்காக ஒருவரை நேசிப்பது என்றால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதற்கு முழுத் தகுதி வாய்ந்தவர்கள்.
நபியவர்கள் உள்ளும், புறமும் பூரண அழகுடையவர்கள்.

#அன்னை_ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா   அண்ணலாரின் ஒளிமிகு அழகை வர்ணித்த போது, " இரவு நேரங்களில் ஊசியின் காதுக்குள் நூலை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நூலையும் ஊசியையும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லலம் அவர்களின் புனிதமான உடல் அருகில் சென்று அந்த ஒளியில் ஊசியில் நூலைக் கோர்ப்பேன்.
மேலும் சொல்கிறார்கள், இருட்டில் ஏதேனும் பொருள் தெரியவில்லை என்றால் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் கரங்களின் ஒளியினால் அவற்றை கண்டுப்பிடிப்பேன்.

 நபித் தோழர் #பராஉ இப்னு ஆஜிப் (ரழி)அவர்கள் சொல்கிறார்  ஒருமுறை பௌர்ணமி இரவில் அண்ணலாரின் முகத்தைப் பார்த்தேன்.
நிலவையும் நபியவர்களின் முகத்தையும் மாறி மாறி பார்த்தேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபியவர்களின் முகத்தில் உள்ள ஜமாலை -அழகை,  பௌர்ணமி நிலவில் என்னால் பார்க்க முடியவில்லை.

   #என் சகோதரர் யூசுப் நபியின் அழகு கவர்ச்சிகரமானது. காண்போரை கவர்ந்திழுக்கும் அழகு.
 #என்னழகோ பார்க்க பார்க்கப் பார்க்க காண்போரின் கண்களை குளிர வைக்கும் அழகு ' என்றார்கள் நாயகம்ﷺ அவர்கள்.

         சிலரை நாம் அவரிடமுள்ள #அறிவாற்றலுக்காக நேசிக்கிறோம்.

 அந்த  அடிப்படையில் நேசிப்பதாக இருந்தால் 'முந்திச்சென்றவர்கள் இனிமேல் வருபவர்கள் என அனைவருடைய கல்வி ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக   நவின்ற நபிகளார் அதற்கு மிகவும் பொருத்தமானவர்கள்.

குறைவான வார்த்தைகளில் ஆழமான, அதிகமான   கருத்து களைச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்

       நாம் நபிகளாரின் மீது வைத்துள்ள அன்பிற்கு பல காரணங்கள் இருந்தாலும்  
அல்லாஹுவும் ரசூலும் நம்மிடம் எதிர்பார்ப்பது #ஹுப்புல்_இத்திபாஈ '  

        அதாவது ஒருவரை நாம் நேசித்தால் அவருடைய நடை,உடை பாவனைகளை நமது வாழ்வில் நமதாக்கிக் கொள்வோம்.

      வெறித்தனமான அரசியல்கட்சித் தொண்டனோ,சினிமா ரசிகனோ தனது நேசத்திற்குறியவரைப் போன்றே தனது சிகையை அலங்காரம் செய்துகொள்கிறான்.பேச்சிலும் செயலிலும் அவரைப் போன்றே தன்னை மாற்றிக் கொள்கிறான்.    
 
           நமது கண்மணி நாயகம்ﷺ அவர்கள் மீது நாம் உண்மையில் நேசமும்,பாசமும் கொண்டிருக்கிறோம் என்றால் நாம் சொல்லாலும்,செயலாலும் நற்குணத்தாலும் அவர்களைப் பின்பற்றவேண்டும்.

     அவர்கள் மீது அன்பு கொண்டு அவர்களின் பெயரால் மவ்லூத் ஓதுகிறீர்கள். உங்களின் எண்ணத்திற்கேற்ப அதற்காக அல்லாஹ்விடம் கூலி உண்டு.

 ஆனால் அதே நேரத்தில் அண்ணலாரின் வரலாறு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட் வீரர்களைப் பற்றியத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.

 நபிஅவர்களைப் பற்றி ஒரு ஐந்து நிமிடம் சொல் என்றால் அவர்களால் சொல்ல முடியுமா? இங்கிருக்கும் அனைவரும்  ஒரு கணம் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்? நபியவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்களில் ஆண்
 குழந்தைகள் எத்தனை? பெண குழந்தைகள் என்று கேட்டால் உங்களால் சொல்ல முடியுமா?

 இந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் எத்தனைபேர் தங்கள் வீட்டில் நபிஅவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கீறீர்கள்? 

எனவே அன்பு சகோதரர்களே! நபிஅவர்களின் மீது உண்மையான நேசம் என்பது அவர்களைப் பின்பற்றுவதில்தான் இருக்கிறது.
------- சிதம்பரம் இப்ராஹீம் நகர் மஸ்ஜிதில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயின் ஜும்மா உரையின் சுருக்கம்.

Friday, October 1, 2021

உண்மை நிகழ்வு

அஷ்ஷைக் முஹம்மது ராத்திப் அந்நாபிலிஸி அவர்களின் பதிவு 
+++++++++++
ஒரு உண்மை சம்பவம் நாம் பெறவேண்டிய பாடம்
------------------------
 கனடாவில் ரொட்டியைத்  திருடியதாக முதியவர் ஒருவர் நீதிபதியிடம் அழைத்து வரப்பட்டார்.
 திருடியதை ஒப்புக் கொண்ட முதியவர் பசியினால் நான் இறந்துவிடுவோனோ எனப் பயந்து   ரொட்டியை திருடி உண்டேன்  என்றார் உருக்கமாக.

 அவருடைய பரிதாப நிலைமையும் உண்மையை ஒப்புக் கொண்டதும் நீதிபதியை நெகிழ வைத்தது.

"நம்நாட்டின் குற்றவியல் சட்டப்படி நீங்கள் திருடியது குற்றம் எனவே அதற்காக பத்து டாலர் அபராதம் விதிக்கிறேன்.
ஆனால் ரொட்டி வாங்கக்கூட பணம் இல்லாத நீங்கள்  எங்கே  அபராதத்தைச் செலுத்தப் போகிறீர்?
உங்களுக்காக அந்த அபராதத்தை நானே செலுத்துகிறேன்"
என்றவர் அவையிலுள்ளவர்கள் முன்னிலையேயே தனது சட்டப்பையிலிருந்து பத்து டாலரை எடுத்து பதிவாளரிடம் கொடுத்து அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு கூறியவர் அந்த முதியவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

பின்பு அங்கே அவையில் அமர்ந்திருவர்களை நோக்கி
 "இந்த முதியவர் இந்த நிலைக்கு வருவதற்கு  அவர் வாழும் சமுதாயமான உங்களுக்கும் பொறுப்பிருக்கிறது
எனவே தார்மீக அடிப்படையில் நீங்களும் பத்து டாலர் அவருக்கு வழங்கவேண்டும் என்றார்.
கூடியிருந்தவர்களிடமிருந்து 490 டாலர் வசூலானது. அதை அந்த முதியவரிடம் வழங்கினார் நீதிபதி.

#ஷைக்_நாபிலிஸி சொல்கிறார் 
இந்த நீதிபதியின் பார்வை இஸ்லாம் வழியுறுத்தும் பார்வை.
இந்த சம்பவத்தைக் கேள்விப் பட்டபோது எனக்கு ஷைக் ஷஃரானி(ரஹ்) அவர்கள் சொன்னது நினைவிற்கு வந்தது,

 #முஸ்லிம்கள் வாழும் ஊரில் ஒரு முஸ்லிம் பசியால் இறந்தால் அந்த ஊரிலுள்ள ஏதோ ஒரு செல்வந்தன்  இறந்தவருக்குச் சேரவேண்டிய பங்கை திருடியிருக்கிறான் என்று பொருள்"
_அஷ்ஷைக் ராத்திப் அந்நாபிலிஸி
--------கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி காசிமி