பெருமானார் ﷺ அவர்களின் மீது நாம் வைத்துள்ள பேரன்பு எந்த வகையைச் சேர்ந்தது?
------ கணியூர் இஸ்மாயீல் நாஜி யின் ஜும்மா உரை(15/11/2019)
-----------------------------
"உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் உண்மையான முஃமினாக ஆகமாட்டார்"என அண்ணல்நபிﷺஅவர்கள் நவின்றுள்ளார்கள்.
ஒருவரின் மீது நாம்வைக்கும் அன்பு பல காரணத்தினால் ஏற்படலாம்.
இந்த நபிமொழி நம்மைப் பெற்றெடுத்த தந்தையை விட,நாம் ஈன்றெடுத்த பிள்ளைகளை விடவும் நபி அவர்களின் மீது அன்பு கொள்ளவேண்டும் எனக் கூறுகிறது.
தந்தையின் மீதும்,பிள்ளைகளின் மீதும் நமக்கேற்படும் பாசம் இயல்பானது. நம்மையறியாமலேயே ஏற்படுவது. அதற்கு அரபியில் '#ஹுப்புத்தபஈ' என்பார்கள்.
அத்தகைய அன்பை நம்மால் அண்ணலாரின் மீது வைக்க முடியுமா?
முடியும் என நபித்தோழர்களின் செயல்கள் நமக்குக் காட்டுகின்றன.
புகாரி ஷரீபில் வருகிறது. நபித் தோழர் #அபுதல்ஹா(ரழி) சொல்கிறார்,கைபர் போர் முடிந்து நபிபெருமான்ﷺ அவர்களும்,அவர்களின் துணைவியார் #ஸபிய்யா(ரழி) அவர்களும் ஒரு ஒட்டகத்தில் எனக்கு முன் சென்று கொண்டிருந்தார்கள். நான் வேறொரு ஒட்டகத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தேன். திடீரென ஒட்டகம் காலிடரி கீழே சாய நபிஅவர்கள் ஒருபக்கமும்,துணைவியார் சற்றுத் தள்ளியும் கீழே விழுந்தார்கள்.
இதைப் பார்த்த நான் பதறிப் போய் என்னையறியாமலேயே நபிஅவர்கள் விழுந்ததைப் போன்றே பூமியில் நானும். விழுந்தேன். (அதாவது என் ஒட்டகத்தை நிறுத்திகீழே இறங்க முற்படாமல் நபியவர்கள் விழுந்ததைப் போன்றே கீழே விழுந்தேன்)
அண்ணலாரின் அருகே சென்று 'காயம் ஏதேனும் ஏற்பட்டதா நபியவர்களே என்று கேட்டேன்.
நபியவர்கள், ஸபிய்யா அவர்களைப் பார் என்று சொன்னார்கள்.
#அபுதல்ஹா ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். 'நான் என் முகத்தை துணியால் மூடிக்கொண்டு அன்னையின் அருகில் சென்றேன். அந்த துணியால் அவர்கள் முகத்தை மூடி அவர்கள் கரங்களை பிடித்து மேலே தூக்கினேன்.
இந்த நிகழ்வு நபித்தோழர்கள் எந்த அளவு நபியவர்கள் மீது நேசம் கொண்டிருந்தார்கள் என்று புரிகிறது.
நபித்தோழர்கள், தம் பிள்ளைகளிடம் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்வதற்கு முன்னால் நபியவர்களுக்கு அடுத்து என் நேசத்திற்குரியவன் நீ என்று சொல்வார்களாம்.
#ஹஜ்ரத்_உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நபியவர்களே! இந்த உலகத்தில் என் பெற்றோர், என் குழந்தைகள், மற்ற அனைவரையும் விட உங்களை அதிகமாக நேசிக்கிறேன். ஆனால், என்னை நான் உங்களை விட அதிகமாக நேசிக்கிறேன் என்றார்.
" லா யா உமர்" முடியாது உமரே உங்களை விடவும் என்னை அதிகமாக நேசித்தால் தான் உண்மை முஃமினாக முடியும் என்றார்கள் நபியவர்கள்
சற்று நேரம் யோசித்த உமர் அவர்கள், இப்போது சொல்கிறேன் நபியவர்களே! என்னை விடவும் உங்களை அதிகமாக நேசிக்கிறேன்".
"அல்ஆன யா உமர்" இப்போது தான் உமரே நீங்கள் உண்மையான முஃமீன் என்றார்கள் நபியவர்கள்.
#உவைஸ் கர்ணி அவர்கள் உஹது போரில் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் பல் ஷஹீதாக்கப்பட்டு விட்டது என்ற செய்தியை கேட்டவுடன் எந்த பல் என்று தெரியாத காரணத்தால் தனது எல்லா பற்களையும் உடைத்துக் கொண்டார்களாம்.
இது நமக்கு பைத்தியக்காரத்தனமாக தெரியலாம். ஆனால் ஒருவர் மீது நாம் கொண்டிருக்கின்ற பேரன்பு அறிவிற்கு அப்பாற்பட்டது.
ஒன்றை நேசிப்பதற்கு அழகும் ஒரு காரணம்.
அழகான குழந்தையைப் பார்த்தால், நமக்கு அந்த குழந்தையின் மீது அன்பு ஏற்படுகிறது.
அழகிற்காக ஒருவரை நேசிப்பது என்றால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதற்கு முழுத் தகுதி வாய்ந்தவர்கள்.
நபியவர்கள் உள்ளும், புறமும் பூரண அழகுடையவர்கள்.
#அன்னை_ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அண்ணலாரின் ஒளிமிகு அழகை வர்ணித்த போது, " இரவு நேரங்களில் ஊசியின் காதுக்குள் நூலை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நூலையும் ஊசியையும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லலம் அவர்களின் புனிதமான உடல் அருகில் சென்று அந்த ஒளியில் ஊசியில் நூலைக் கோர்ப்பேன்.
மேலும் சொல்கிறார்கள், இருட்டில் ஏதேனும் பொருள் தெரியவில்லை என்றால் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் கரங்களின் ஒளியினால் அவற்றை கண்டுப்பிடிப்பேன்.
நபித் தோழர் #பராஉ இப்னு ஆஜிப் (ரழி)அவர்கள் சொல்கிறார் ஒருமுறை பௌர்ணமி இரவில் அண்ணலாரின் முகத்தைப் பார்த்தேன்.
நிலவையும் நபியவர்களின் முகத்தையும் மாறி மாறி பார்த்தேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபியவர்களின் முகத்தில் உள்ள ஜமாலை -அழகை, பௌர்ணமி நிலவில் என்னால் பார்க்க முடியவில்லை.
#என் சகோதரர் யூசுப் நபியின் அழகு கவர்ச்சிகரமானது. காண்போரை கவர்ந்திழுக்கும் அழகு.
#என்னழகோ பார்க்க பார்க்கப் பார்க்க காண்போரின் கண்களை குளிர வைக்கும் அழகு ' என்றார்கள் நாயகம்ﷺ அவர்கள்.
சிலரை நாம் அவரிடமுள்ள #அறிவாற்றலுக்காக நேசிக்கிறோம்.
அந்த அடிப்படையில் நேசிப்பதாக இருந்தால் 'முந்திச்சென்றவர்கள் இனிமேல் வருபவர்கள் என அனைவருடைய கல்வி ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக நவின்ற நபிகளார் அதற்கு மிகவும் பொருத்தமானவர்கள்.
குறைவான வார்த்தைகளில் ஆழமான, அதிகமான கருத்து களைச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்
நாம் நபிகளாரின் மீது வைத்துள்ள அன்பிற்கு பல காரணங்கள் இருந்தாலும்
அல்லாஹுவும் ரசூலும் நம்மிடம் எதிர்பார்ப்பது #ஹுப்புல்_இத்திபாஈ '
அதாவது ஒருவரை நாம் நேசித்தால் அவருடைய நடை,உடை பாவனைகளை நமது வாழ்வில் நமதாக்கிக் கொள்வோம்.
வெறித்தனமான அரசியல்கட்சித் தொண்டனோ,சினிமா ரசிகனோ தனது நேசத்திற்குறியவரைப் போன்றே தனது சிகையை அலங்காரம் செய்துகொள்கிறான்.பேச்சிலும் செயலிலும் அவரைப் போன்றே தன்னை மாற்றிக் கொள்கிறான்.
நமது கண்மணி நாயகம்ﷺ அவர்கள் மீது நாம் உண்மையில் நேசமும்,பாசமும் கொண்டிருக்கிறோம் என்றால் நாம் சொல்லாலும்,செயலாலும் நற்குணத்தாலும் அவர்களைப் பின்பற்றவேண்டும்.
அவர்கள் மீது அன்பு கொண்டு அவர்களின் பெயரால் மவ்லூத் ஓதுகிறீர்கள். உங்களின் எண்ணத்திற்கேற்ப அதற்காக அல்லாஹ்விடம் கூலி உண்டு.
ஆனால் அதே நேரத்தில் அண்ணலாரின் வரலாறு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட் வீரர்களைப் பற்றியத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.
நபிஅவர்களைப் பற்றி ஒரு ஐந்து நிமிடம் சொல் என்றால் அவர்களால் சொல்ல முடியுமா? இங்கிருக்கும் அனைவரும் ஒரு கணம் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்? நபியவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்களில் ஆண்
குழந்தைகள் எத்தனை? பெண குழந்தைகள் என்று கேட்டால் உங்களால் சொல்ல முடியுமா?
இந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் எத்தனைபேர் தங்கள் வீட்டில் நபிஅவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கீறீர்கள்?
எனவே அன்பு சகோதரர்களே! நபிஅவர்களின் மீது உண்மையான நேசம் என்பது அவர்களைப் பின்பற்றுவதில்தான் இருக்கிறது.
------- சிதம்பரம் இப்ராஹீம் நகர் மஸ்ஜிதில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயின் ஜும்மா உரையின் சுருக்கம்.