Kaniyur Ismail Najee Manbayee
இரண்டாம் கலிபா அமீருல் முஃமீனின் உமர் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி காலத்தில் “ஸுபய்க்” என்ற ஒரு மனிதர் இருந்தார்.
“தாரியாத்” என்ற அத்தியாயத்திற்கு நூதனமான விளக்கங்களை கூறி ஈராக் பகுதி முழுவதும் சுற்றி வந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினார்.
விதவிதமான அவருடைய விளக்கத்தை கேட்டு முஸ்லிம்கள் மத்தியிலே தவறான எண்ணங்களும் கொள்கை குழப்பங்களும் ஏற்பட்டன.
மக்கள் பலவாறு எடுத்துக் கூறியும் அவர் தனது பரப்புரையை நிறுத்தவில்லை. இறுதியில், அப்பகுதியின் அதிகாரி அவரை கைது செய்து ஒரு தூதுவரின் துணையுடன் மதினாவிற்கு அனுப்பி வைத்தார்.
கலீபா விற்கு அந்த அதிகாரி எழுதிய கடிதத்தில் இந்த மனிதரின் பரப்புரையினால் வெகுஜன மக்களிடையே பெரிய குழப்பமும் கருத்து வேற்றுமையும் ஏற்பட்டிருக்கிறது இவரை விசாரியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தை படித்த கலீபா அந்த குற்றவாளியை அழைத்து விசாரித்து அவருடைய கருத்து தவறு என்பதை உணர்த்தினா்கள்
ஆனால், அவர் திரும்ப திரும்ப தனது கருத்தை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். பொறுமையை இழந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது சாட்டையை வரவழைத்து அவரை அடிக்க ஆரம்பித்தார்.
ரத்தம் பெருக்கெடுத்து ஓட வலி தாங்க முடியாமல் அம்மனிதர் சத்தமிட்டு,
“"قذ ذهب الذي كنت أجده في راسي
( ألاصابه لابن حجر)
"என் மண்டையில் எதை ஏற்றி வைத்திருந்தேனோ அது போய் விட்டது” என கத்தினார்.
அதற்கு மேல் தண்டிக்காமல் கலீபா அவர்கள், அவரை விடுவித்து விட்டார்.
அம்மனிதர் அதன் பின் வாழ்நாள் முழுதும் அந்த பேச்சையே எடுக்கவில்லை.
சில நேரங்களில், ஆதாரங்களை காட்டி பேசுவது பலனளிப்பதில்லை.
சாட்டை வழியாக பேசுவது பலனளிப்பதாக இருக்கிறது.
உண்மை என்னவென்றால், பயம் இல்லாத மனப்பாங்கு தான் பல தவறுகளுக்கு வழி வகுக்கிறது. மனிதனுக்கு தண்டனை கிடைக்கும் என்ற பயம் இருக்குமேயானால், அவன் நேர்மையாக நடக்க முயற்சிப்பான்.
பயம் ஒரு மனிதனை நிதானமாக சிந்திக்க செய்கிறது.
நிதானமாக சிந்திப்பவன் தவறு செய்ய துணிய மாட்டான்.
தேவையில்லாத பேச்சுகளை பேச மாட்டான்.
பயம் மனிதனை திருத்தும் ஒரு கருவி.
_மவ்லானா வஹீதுத் தீன் கான் அவர்களின் “அர்ரிஸாலா” என்ற மாத இதழிலிருந்து.. (ஜனவரி 1983)
- தமிழில் கணியூர் இஸ்மாயில் நாஜி ஃபாஜில்மன்பஈ

No comments:
Post a Comment