Friday, March 5, 2021

நிகாஹ் நாமா

நிகாஹ்நாமா எனும்
திருமண ஒப்பந்தப் பதிவேடும்
மணமகள் இடும் நிபந்தனைகளை பதிவு செய்தலும் ....
------------------------------------------------
.நிக்காஹ் என்பது இஸ்லாத்தில் வாழ்க்கை ஒப்பந்தமாகும். ஒப்பந்தம் எனும் போதே ஒப்பந்தம் செய்யும் இரு சாராரும் தங்கள் நலனை பாதுகாக்கும் வகையில் சில நிபந்தனைகள் இடுவார்கள்.

அதே போன்று, நிக்காஹ்வில் மணமகனும், மணமகளும் மணவாழ்க்கையில் ஒருவர் மற்றவரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை இடுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.

உரிமைகள் பொறுத்த வரையில், பெண்களுக்கு கடமைகள் உள்ள அளவிற்கு உரிமைகளும் உண்டு. (அல்குர்ஆன் – 22:28).

.எனினும், இஸ்லாம் ஆணுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கியுள்ளது. குறிப்பாக, இஸ்லாத்தை பொறுத்த வரை குடும்பத்தை பாரமரிக்கின்ற பொறுப்பு ஆணுக்கே சேரும். (அல்குர்ஆன்-4:34).என்ற அடிப்படையில் உடலாலும், பொருளாலும் இரு மனைவிகளை நீதமுடன் நிர்வகிக்கும் ஆற்றல் இருந்தால் நான்கு பெண்கள் வரை மணந்துக் கொள்ளும் சலுகை உண்டு.

இரண்டு , மனைவியுடன் வாழ விருப்பமில்லையென்றால், மூன்று முறை கால இடைவெளியில் தலாக் விடும் உரிமையும் உண்டு.

இந்த சிறப்பு சலுகையை தற்காலத்தில் பலர் முறை தவறா கப் பயன்படுத்துகிறார்கள் எனவே, திருமண ஒப்பந்தத்தின் போதே ஒரு பெண், தன்னுடைய வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கத்துடன் இது தொடர்பான சில நிபந்தனைகளை நிக்காஹ் ஒப்பந்தத்தில் இணைப்பதற்கு உரிமையுண்டா என்பது தான் கேள்வி.

.இது தொடர்பாக, ஃபுகஹாக்கள் எனப்படும் ஷரியத் சட்ட அறிஞர் பெருமக்கள் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் உண்டு. நீண்ட விவாதங்களும் நடைபெற்று வருகின்றன

.அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உக்பா பின் ஆமீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :“ நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்படவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்.”

இமாம் புஹாரி அவர்கள், “ திருமணத்தில் முன் நிபந்தனைகள்” என்ற தலைப்பில் இந்த ஹதீஸை (ஹதீஸ் எண் : 2721, 5151) பதிவிட்டிருக்கிறார்கள்.இமாம் முஸ்லிம் அவர்கள், “திருமணத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றல்” என்ற தலைப்பில் இந்த ஹதீஸை (ஹதீஸ் எண் : 2772) பதிவிட்டிருக்கிறார்கள்.

புஹாரி ஷரீஃபின் விரிவுரையான ஃபத்ஹுல் பாரியில் இந்த ஹதீஸின் (ஹதீஸ் எண் : 5151) விரிவுரையில் கீழ்கண்ட சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருவர் வந்து, தான் திருமணம் செய்து கொண்ட போது தன்னுடைய மனைவி அவளுடைய வீட்டிலேயே தங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டாள் என்றும், இப்போது வேறோர் இடத்திற்கு செல்ல தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.அதற்கு, “அவளுக்கு அவளுடைய நிபந்தனை உண்டு” என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். அதற்கவர், அப்படியானால், ஆண்கள் அழிந்தார்கள்.ஏனெனில், திருமணத்தின் போதே முன் நிபந்தனையிட்ட ஒரு பெண் தான் விரும்பும் போதே கணவனிடமிருந்து விவாக விலக்கு பெற எண்ணுவாள்.(கணவன், தான் விரும்பும் போது விவாக பந்தத்தை விலக்கிக் கொள்ள முடியாது) என்று தெரிவித்தார்.“ நிபந்தனைகள் விதிக்கப்படும் போது உரிமைகள் துண்டிக்கப்படுகின்றன. நீ எதனை நிபந்தனையிட்டயோ அது உனக்கு உண்டு” என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்களும், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களும், மணப்பெண் நிபந்தனை விதிப்பது கூடும் எனவும் அந்த நிபந்தனையை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அதை நிறைவேற்றுவது கடமை எனவும் கூறியுள்ளார்கள்.

வாழ்க்கை ஒப்பந்த பதிவுகளில், மணமகன், மணமகள் சார்பில் விதிக்கப்படும் நிபந்தனைகள் பதிவு செய்யப்படா விட்டாலும் தனிப்பட்ட முறையில் இரண்டு குடும்பத்தாரும் சில நிபந்தனைகளை தங்களுக்குள் எழுதி வைத்துக் கொள்கிறார்கள்.

உதாரணமாக, திருமணத்திற்கு பின்னும் மணப்பெண் மேற்படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும், பணிபுரிய அனுமதிக்க வேண்டும், மணமகன் மணப்பெண் வீட்டிலேயே தங்கி விட வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்கிறார்கள்.

ஆண்களும்சில நிபந்தனைகளை விதிக்கிறார்கள்
இவையெல்லாம் பெரும்பாலும் பொருளாதரத்தை சார்ந்த தாகாவே இருக்கும்.

ஆனால் ஒரு பெண் மணவாழ்க்கையில் மனதளவில் பாதிக்கப்ப டும் விடயங்களைப்பற்றி முன்னதாக பேசப்படுவதில்லை.
அவைகள் என்ன என்பதை நாளை பார்ப்போம்
இன்ஷா அல்லாஹ் .

-----நீண்ட பதிவுகள் வேண்டாம். படிக்க சிரமமாக இருப்பதாக சில சகோதரர்கள் சொல்கிறார்கள்
எனவே சுருக்கமாகவே எழுதுகிறேன்.

No comments:

Post a Comment