Saturday, September 26, 2020

துயரத்தில் பெருந்துயரம் துணைவியைப் பிரிவதே

துயரத்தில் பெருந்துயரம்
துணைவியைப் பிரிவதே!
--------
நேற்று காலை( 26/09/19)
என்னுடன் பல பொதுசேவைகளில் பயணித்தவர்,குடும்ப நண்பர்,இன்றைய சிதம்பரம் சென்டரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் இப்ராஹீம் ஹாஜியாரின் துணைவியார் மறைந்த செய்தியை அறிந்து நானும் எனது துணைவியும் பின்னத்தூரிலுள்ள அவர் இல்லத்திற்குச் சென்றோம்.
82வயது முதியவரான ஹாஜியார் எப்பொழுதும்,எந்நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதனமாக பேசுபவர்.
இந்நிலையிலும் அழுது புலம்பாமல் தன் உணர்ச்சிகளைஅடக்கிக் கொண்டு உரையாடினாலும் அவர் நினைவுகள் பின்னோக்கிச் சென்று  56ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்து ,சுக,துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டவர் எப்படியெல்லாம் தன்னை கவனித்துக் கொண்டார் என்பதைப் பற்றிப்  பேசிக் கொண்டேயிருந்தார்.
தான்  வெளியே செல்லும் போதும்,திரும்பி வீட்டில் நுழையும் பொழுதும்  தேநீர் கப்புடனேயே வருவார்.
 நான் சிதம்பரம் செல்ல டூவீலரை எடுக்கும் போது "கொஞ்சம் நில்லுங்கள்"  எனக் கூப்பிட்டுக் கொண்டே அருகே வந்து நான் அணிந்திருக்கும  தொப்பியை எடுத்துவிட்டு வேறு தொப்பியை என் தலையில் அனுவிப்பார் எனச் சொல்லும்போதே அவர் குரலில் இனி இதோ போல் யார் தன்னைக் கவனித்துக் கொள்வார் என ஏக்கம் தெரிந்தது.
   பின் தன் அருகே அமர்ந்திருந்த இந்து நண்பரைச் சுட்டிக்காட்டி இவரும் அண்மையில் தன் மனைவியை இழந்தவர் என்றார்.
   அந்த பெரியவர்  பேச ஆரம்பித்தார்:
#தாயும்,தாரமும் ஒன்று. இரண்டிற்கும் மாற்றில்லை.எனக்கு 81 வயதாகிறது,53ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்தவர் திடீரென என்னை விட்டு பிரிந்தவிட்டார்,
காலையில் வழக்கமாக நாங்கள் செய்யும் பூஜைகளை முடித்துவிட்டு பூஜைஅறையை விட்டு  வெளியே வந்தோம்,  என் மனைவி மயங்கி விழுந்தார்,எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றேன்.இறந்துவிட்டார் என்றார்கள் பத்து நிமிடத்தில்  எனக்கு  எல்லாமே முடிந்துவிட்டது. எப்பொழுதும் எனக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காதவர் மரணத்திலும் எனக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தாமல் சென்றுவிட்டார்.
எனக்கு பையன்களும்,மருமகள்களும் இருக்கின்றனர்,இருந்தும் வெறுமையை உணர்கிறேன், எனக்கொரு தேவை ஏற்படும் பொழுது அவர்களிடம்  சென்று கேட்பதற்கு எனக்கு   ஒரு தயக்கம் ஏற்படுகிறது.
#கணவனின்றிஒருபெண் #வாழ்ந்துவிடுவாள்,ஆனால் #மனைவியின்றிஒருஆண்மகன்வாழ்வது
#பெருந்துயரம் என்றார்.
இரண்டு பேரின் துணைவியர்களும் நல்ல உடல்நலத்துடன் இருக்கும்பொழுது எதிர்பாராமல் மறைந்திருக்கிறார்கள்.
நான் சொன்னேன்" நபிகள் நாயகம் செய்த பிரார்த்தனைகளில்" #படுத்த படுக்கையாக பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் மரணிக்க  வேண்டும்" என்பதும் ஒன்று என்றேன்.
  #அண்ணண் கவிக்கோ அப்துர்ரஹ்மான் அவர்களின் துணைவியார் மறைந்தபொழுது அவரை சந்திக்கச் சென்றேன் வக்ப் வாரியத் தலைவராக அவர் இருந்த நேரம். பெரும்பாலும் வீட்டிலிருப்பதை விட வெளியே இருந்த நாட்கள்தாம் அதிகம்.
தனது துணைவியாரைப் பற்றிச் சொல்லும் போது #எனக்குத்_தொல்லைதராத_துணைவி #அவர்
என்றார்.
விகடன் இதழில் அவர் எழுதிய கவிதையில்

#மின்சாரம் கண்ணுக்குத் தெரிவது இல்லை. ஆனால், நமக்குத் தேவைப்படும் போது விளக்கை எரிக்கிறது; விசிறியைச் சுழற்றுகிறது. என் மனைவி மின்சாரமாக இருந்தாள்
#என்_மனைவி_இளமையில்_மதுவாக இருந்தாள்
#நடுமையில்_பாலாக_இருந்தாள்; #முதுமையில்_மருந்தாகஇருந்தாள்.
   இதை படித்துவிட்டு கவிக்கோ அண்ணனுக்கு போன் செய்து "என்னண்ணே! மனைவியை மதுவிற்கு ஒப்பிட்டுள்ளீர்கள்" என்றேன்,
  ஏன் ஆலிம்ஷா மது எனும் வார்த்தை ஹராமா? இளமையில் நம் மனைவி நம் மதியை மயக்கும் மாது தானே" என்றார்.

      கணவரின் நலம் நாடும் மனைவி அவனின் இதயத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறாள்.
       அண்ணல் நபி ﷺ அவர்கள் தனது இருபத்தைந்தாவது வயதில் தன்னைவிட வயதில் மூத்த கதீஜா(ரழி) அவர்களை மணமுடித்து அவர்களுடன் இருபத்தைந்து வருடங்கள் வாழ்ந்து தனது ஐம்பதாவது வயதில் தனது துணைவியை இழக்கிறார்கள்.
      அதன் பின் பல சமூக,அரசியல் காரணங்களுக்காக பல தாரங்களை மண முடித்தாலும் தனது இறுதி காலம் வரை பதிமூன்றாண்டுகள்  அன்னை கதீஜாவின் நினைவுகளுடனேயே வாழ்ந்தார்கள் என்பதை அன்னை ஆயிஷா(ரழி)அவர்களின் அறிவிப்புகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
  அன்னை கதீஜா அவர்கள் தன்மீது வைத்திருந்த அன்பைப் பற்றிக் 
குறிப்பிடும் போது 
#அவருடைய_அன்பை_அருள்வளமாக_அருளப்பட்டேன் என்கிறார்கள்.
 " அழகானமனைவி,அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே"என்கிறார் கவிஞர்.
    அத்தகைய மனைவியின்  இழப்பு பெரும் துயரமே!
     நேற்று வந்த வேதனையான செய்தி கோவை அப்துல் அஜீஸ் பாகவி யின் துணைவியார் மறைந்த செய்தி.
இளமைக்கும்,முதுமைக்கும் இடையேவரும் நடுமை காலத்தில் ஒருமனிதன் குடும்பாரத்தினால் சிரமப்படுவான். அப்பொழுது அவனுக்குத் தோள் கொடுப்பவள் அன்பான துணைவி.
அந்த நேரத்தில் அந்தத் துணைவியை ப் பிரிவது அவருக்குப் பேரிழப்பே!
    அல்லாஹ் பாகவியாருக்கு மன அமைதியைத் தருவானாக!
மறைந்த சகோதரியின்  பாவங்களை மன்னித்து அவருடைய மண்ணரையை பூங்காவனமாக்குவானாக!
 ஆமீன்.
------கணியூர் இஸ்மாயீல் நாஜி
சிதம்பரம் 27/09/19,

No comments:

Post a Comment