Thursday, July 13, 2023

ஆலிம்கள் பார்க்கப்படும் இன்றி வேறு பணிகளில் ஈடுபடலாமா

ஆலிம்கள் மார்க்கப் பணியின்றி
 வேறு பணிகளில் ஈடுபடலாமா?
என் உஸ்தாதுமார்கள் சொன்ன பதில்;
-------
 லால்பேட்டையிலும்,
தேவ்பந்த் மதரஸாவிலும் பட்டங்களை வாங்கியபின்  #நீடூர்(ஏழு ஆண்டுகள்,#ஏர்வாடி(களக்காடு)(2ஆண்டுகள்) #தொண்டி(இரண்டு மாதங்கள்) #திருப்பரங்குன்றம் (ஆறுமாதம்)மதரஸாக்களில் பணியாற்றிய பின் தொடர்ந்து மதரஸாக்களில் பணியாற்ற பல் வேறு காரணங்களால் மனம் விரும்பவில்லை.
வெளிநாடு போகலாம் என முடிவெடுத்து என் உஸ்தாது பெருந்தகைகளிடம் கேட்டேன் 
கண்ணியமிகு உஸ்தாத்  #லால்பேட்டைஅப்துல்லாஹ் ஹஜரத் அவர்கள் கோபமாக "உனக்கு மதரஸாவில் இலவசமாக  உணவளித்தவர்கள் நீ மார்க்கப் பணிகளில் ஈடுபடவேண்டும் என்ற நிய்யத்தில்தான் உதவி செய்தார்கள் அதற்கு மாற்றமாக வேறு பணிக்களுக்குச் செல்வது அவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்" என்றார்கள்.
என் மீது எப்பொழுதும் கரிசனையுடன் ஆலோசனை தரும் மரியாதைக்குறிய #உஸ்தாத் அப்துல் ஜமீல் ஹஜரத் அவர்கள் வேறு பணிகளுக்குச் சென்றால் ஆலிம்களுக்குள்ள மரியாதை கிடைக்காது
பொறுமையாக மதரஸாபணிகளிலேயே ஈடுபடுங்கள் என்றார்கள்.

அப்பொழுது #மறுமலர்ச்சி வார இதழுக்கு உருதுவிலிருந்து மொழியாக்கம் செய்யும் திறமையுள்ள மவ்லவி துணைஆசிரியர் பணிக்குத் தேவை என விளம்பரம் வந்தது.
அது தொடர்பாக ஆசிரியர் நாவலர் யூசுப் ஸாஹிபிடமும் பேசினேன்.
முஸ்லிம் லீக்கில் இணைந்து அரசியலில் ஈடுபடலாமென ஆர்வம் வந்தது.
எதற்கும் #சொல்லின்செல்வர் அண்ணண் எம்.எம். பீர்முஹம்மது சாஹிபிடம் கேட்போம் என கடிதம் எழுதினேன்.

"அரசியல் ஆபத்தான சூழ்ச்சிகள் நிறைந்த ஒரு துறை உங்களைப் போன்ற எதார்த்தமான மார்க்க அறிஞர்களை தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டு உங்களை வளரவிடமாட்டார்கள்.
ஆசிரியர் பணி உன்னதமானது. உங்களின் சுதந்திர மனப்பான்மையைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஆசியர் பணியையே தொடருங்கள் என்று கடிதம் எழுதினார். 
அதனைத் தொடர்ந்து கிளியனூர் மதரஸாஇரண்டு ஆண்டுகள் ,அத்திக்கடை மதரஸா ஓராண்டு என பணியாற்றினேன்.
தொடர்ந்து பணியாற்ற விருப்ப மின்றி நண்பர்களின் உதவியுடன் டிராவல்ஸ்,
பின் கூரியர் சர்வீஸ் என முழுநேரமாக தொழிலில் இறங்கினேன்.

இருப்பினும் எனக்கு உணவளித்தவர்களின் எண்ணம் நிறைவேற உயிர் உள்ளவரை எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் மார்க்கப் பணியாற்றவேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டேன்.

தஃவா பணியில் ஈடுபட்டேன்,மார்க்கமேடைகளில் அன்பளிப்புகள் வாங்காமல் உரையாற்றி வருகிறேன். ஜும்மா உரையும் வாய்ப்பு கிடைக்கும் போது  செய்து வருகிறேன்.
ஆலிம்கள் தங்கள் வாழ்வாதரத்திற்காக என்ன பணி செய்தாலும் ஏதோ ஒரு வகையில் மார்க்கப் பணி செய்வது கடமையாகும்.
 ---கணியூர் இஸ்மாயீல் நாஜி

No comments:

Post a Comment