Tuesday, January 3, 2023

கவலை துக்கம் கடன் சுமைகள் நீங்க துஆ வரும் இமாம் இப்னு கய்யிம் அவர்களின் விளக்கமும்

கவலை.துக்கம்,கடன் சுமைகள் நீங்க காத்தமுன் நபிய்யீன் ﷺ அவர்கள் கற்றுத்தந்த துஆவும் 

துஆ விற்கு இமாம் இப்னு கய்யிம் (ரஹ்) அவர்களின் விளக்கமும் 
*****************************************   
     ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதிற்கு வந்தார்கள், அங்கே  அன்சாரித் தோழர் அபூ உமாமா(ரழி) அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். 
அருகே சென்று ,
அபூஉமாமா! தொழுகைக்கான  நேரம் இப்பொழுதில்லையே  ஏன் இங்கு அமர்ந்திருக்கிறீர்"  எனக்கேட்டார்கள்.
   அதற்கு   அபூஉமாமா(ரழி),
"நபியவர்களே! கவலையும்,கடன்சுமையும என்னைமிகைத்து கலங்க வைக்கின்றன"  என்றார்.

 அபூ உமாமா! உனக்கு சில வாக்கியங்களைச் சொல்லித்தருகிறேன்., 
காலையும், மாலையும் ஓதிவா உனது கவலைகளும்,கடன்களும் தீரும் என்று கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கீழ்கண்ட துஆவைக் கற்றுக்கொடுத்தார்கள்

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَالْبُخْلِ،
 وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَقَهْرِ الرِّجَالِ،
அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி 
 வ அஊதுபிக மினல் அஜ்லி வல் கஸலி 
 வ அஊதுபிக மினல்  ஜுப்னி  வல் புக்லி 
 வ அஊதுபிக மின் gaஙலபதித் தைனி 
வ கஹ்ரிர் ரிஜால்

பொருள் : யா அல்லாஹ்!  நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். 
இயலாமை சோம்பலை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத்  தேடுகிறேன்.
 கோழைத்தனம் ,கருமித்தனத்தை விட்டும்
 உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
 கடன் மிகைப்பதை விட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை  விட்டும் உன்னிடம்  பாதுகாப்புத் தேடுகிறேன்."

    நபித்தோழர்   அபூஉமாமா சொல்கிறார்,

 நான் நபியவர்கள் கற்றுக்கொடுத்த துஆவை ஒதி வந்தேன் எனது கவலைகள் தீர்ந்தன,கடன்கள் நிறைவேறின.
    அறிவிப்பாளர்; அபூ ஸயீத் அல்குத்ரி(ரழி)
நூல் :அபூதாவூத் 1555.

------------------------------------------------------

     இந்த துஆவிற்கு விளக்கம் தந்த அறிஞர் இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்)அவர்கள் சொல்கிறார்கள்:

மனிதனின் மனதைப்பாதிப்பவைகள் எட்டு விடயங்கள்
அவைகளை நான்கு இணைகளாக பிரிக்கலாம்.

முதல் இணை #கவலை_துயரம்

மனஅழுத்தம் இரண்டு காரணங்களால் ஏற்படலாம்
ஒன்று வருங்காலத்தில்  நாம் எதிர்பார்பபது,நடக்குமா?நடக்காதா என்ற எதிர்பார்ப்பால் ஏற்படும் #கவலை.

மற்றொன்று கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு,நெருங்கியவர்களின் இழப்பு போன்றவைகளால் ஏற்படும் #துயரம்

அடுத்த இணை #இயலாமை_சோம்பல்

நிலைமைகளை சீர்செய்ய முயற்சி செய்தும் முடியாமல் போவது #இயலாமை
நிலைமைகளை சீர் செய்ய முயற்சிக்காமல் இருப்பது #சோம்பேறித்தனம்

அடுத்த இணை #கருமித்தனம்_கோழைத்தனம்

நிலைமைகளை சீர் செய்ய பணத்தை செலவு செய்ய மனமில்லாமை #கருமித்தனம்
உடலால் உழைக்கப்பயப்படுவது #கோழைத்தனம்

மேற்கண்ட ஆறு குணங்கள் மனிதனிடம் மிகைக்கும் போது  ஏற்படுவது
அடுத்த இணையான #கடன் பெருகுவதும் அதன் காரணமாக கடன் கொடுத்த #மனிதர்களின்ஆதிக்கமும்.
   
    மனிதனின் பலவீனங்களை நன்கறிந்த நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதர்களுக்கேற்படும் துன்பங்களுக்கு அடிப்படை காரணிகளான  கவலை,துயரம்,இயலாமை,சோம்பல்,கருமித்தனம்,கோழைத்தனம்,கடன்சுமை போன்றவைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுமாறு பணித்தார்கள்.
அண்ணல் நபியின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்து அபூ உமாமா (ரழி) மனமுறுகி பிரார்த்தித்தபொழுது  அல்லாஹ் அவருடைய கடன்களும் கவலைகளும் தீர்க்கும் பாதைகளை திறந்துவிட்டான்.

நாமும் நம்பிக்கையுடன் இந்த துஆவை காலையில் பஜ்ர் தொழுகைக்குப் பின்னும் மாலையில் மஃரிப் தொழுகைக்குப் பின்னும் ஓதிவருவோம். இன்ஷாஅல்லாஹ்.
அல்லாஹ் நம்முடைய கவலைகளையும்,கடன்களையும் நீக்கி அருள் புரிவானாக!ஆமீன்.
        روضة المحبين 
எனும் நூலிருந்து தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ.தேவ்பந்தி.

No comments:

Post a Comment