கிராமவாசிகளின் மதிநுட்பம் 1
_________&
அரபு கிராமவாசி ஒருவர் #அப்துல்லாஹ் என்ற பெயரின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக மூன்று மகன்களுக்கும் #அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டினார்
ஒருநாள் அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு மரணப்படுக்கையில் மூன்று அப்துல்லாவையும் கூப்பிட்டு அப்துல்லாஹ் வாரிசாவார் அப்துல்லாஹ் வாரிசாக மாட்டார் அப்துல்லாஹ் வாரிசாவார் எனச் சொல்லியவாறு மரணம் அடைந்து விட்டார்
இறுதி சடங்குகள் முடிந்த பின் எந்த அப்துல்லாஹ் வாரிசாக மாட்டார் எந்த அப்துல்லாஹ் வாரிசாவார் என்ற குழப்பம் அவர்களிடையே எழுந்தது
இது தொடர்பாக நகர நீதிபதி-காழி யிடம் சென்று பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று புறப்பட்டார்கள்
வழியில் வியாபாரி ஒருவர் அவர்களைத் தடுத்து என் ஒட்டகம் ஒன்றைக் காணவில்லை நீங்கள் பார்த்தீர்களா? எனக் கேட்டார்
அதற்கு முதலாம் அப்துல்லாஹ், அதற்கு ஒரு கண்ஊனமாக எனக் கேட்டான்
ஆமாம் ஒரு கண் தெரியாது என்றார வியாபாரி
இரண்டாம் அப்துல்லாஹ் அதற்கு ஒரு கால் ஊனமா எனக் கேட்டான்
ஆமாம் ஆமாம் சரிதான் அது நொண்டி நொண்டி நடக்கும் என்று சொன்னான் வியாபாரி
மூன்றாம் அப்துல்லாஹ் அதனுடைய வால் துண்டிக்கப்பட்டு இருந்ததா எனக் கேட்டான்
வியாபாரி மகிழ்ச்சியுடன் ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்கிற அதே ஒட்டகம் தான் எங்கே பார்த்தீர்கள்? என்று கேட்டான் மூவரும் கோரசாக நாங்கள் பார்க்கவே இல்லை என்றார்கள்
வியாபாரிக்கு ஆத்திரம் பீறிட்டு வந்தது ஒட்டகத்தின் உடைய அங்க அவயங்களைச் சரியா சொல்கிறீர்கள் ஆனால் பார்க்கவில்லை என்கிறீர்கள்
நீங்கள் தான் அதை அறுத்து சாப்பிட்டு விட்டீர்கள் வாருங்கள் நகர நீதிபதியிடம் சென்று இதற்கு ஒரு முடிவு கட்டுவோம் எனச்சொல்ல அங்கே தான் நாங்களும் போகிறோம் வாருங்கள் போகலாம் என்று
மூன்று பேரும் அந்த வியாபாரியுடன் நீதிபதியிடம் வந்தனர்.
நீதிபதி முதலில் வியாபாரியின் முறையீட்டைக் கேட்க
வியாபாரி இவர்கள் என் ஒட்டகத்தின் அங்க அடையாளங்களைச் சரியாகச் சொல்கிறார்கள் ஆனால் நாங்கள் பார்க்கவில்லை என்கிறார்கள் இவர்கள் பொய் சொல்கிறார்கள் விசாரித்து நல்ல தீர்ப்பு வழங்குங்கள் என்றான்
முதலாவது அப்தல்லாஹ்விடம் அந்த ஒட்டகம் கண் ஊனம் என்று அதைப் பார்க்காமல் எவ்வாறு சொன்னாய்?என வினவினார் நீதிபதி
நான் அதைப் பார்க்கவில்லை ஆனால் நாங்கள் வருகின்ற பாதையில் இருபுறமும் புல் பூண்டுகள் முளைத்து இருக்க ஒரு பக்கம் மட்டும் அந்த ஒட்டகம் மேய்ந்து இருப்பதை நாங்கள் பார்த்தோம் எனவே அதற்கு ஒரு கண் ஊனம் என யூகித்தேன்.
ஆனால் நான் பார்க்கவில்லை எனச் சொன்னான்
இரண்டாம் அப்துல்லாவிடம் கேட்டபோது நானும் பார்க்கவில்லை. ஒட்டகத்தின் காலடிகள் அழுத்தமாக மணலில் பதிந்திருக்கும்
ஆனால் இதனுடைய காலடிகளில் ஒன்று சரியாக பதியாமல் இருந்தது அதனால் ஒரு கால் ஊனமென ஊகித்தேன் என்றான்
முன்றாம் அப்துல்லாஹ்வும் நானும் பார்க்கவில்லை ஆனால் அதனுடைய புளுக்கையைப்பார்த்தேன்
ஒட்டகம் புழுக்கை போடும்போது வலை ஆட்டிக்கொண்டே இருக்கும் அதனால் புழுக்கைகள் குவியலாக ஒரே இடத்தில் விழாமல் பரவலாக சிதறிக்கிடக்கும் ஆ னால் இந்த ஒட்டகம் போட்ட புழுக்கைகள் குவியலாக ஒரே இடத்த்தில் இருந்ததால் அதனுடைய வால் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என ஊகித்தேன் என்றான்
அவர்களின் மதிநுட்பத்தை கண்டு வியந்த நீதிபதி
இவர்கள் உண்மையைத்தான் சொல்லுகிறார்கள் அவர்கள் ஒட்டத்தைப் பார்க்கவில்லை நீ போய் வேறு இடத்தில் தேடிப் பார் என்று அந்த வியாபாரியை அனுப்பிவிட்டார்
பின் உங்களுடைய வழக்கு என்ன என்று கேட்டார் இவர்கள் தங்களுடைய பிரச்சனையை சொல்லி எங்களில் யார் யார் வாரிசு என்று நீங்கள் தீர்ப்பளியுங்கள் என்றனர்
வழக்கைக் கேட்டவுடன் நீதிபதிக்கு ஒரு கணம் தலை சுற்றிவிட்டது இதுவரை அவர் எதிர் கொண்ட வழக்குகளில் இதுபோன்ற வழக்கைக் கேள்விப்பட்டதே இல்லை
"நீங்கள் இந்த இரவு எனது விருந்தினர் விடுதியில் தங்குங்கள் நாளை உங்களுக்கு நான் தீர்ப்பு அளிக்கிறேன் என்று அவர்களை அனுப்பி விட்டு,
காவலாளியை அழைத்து விருந்தினர் மாளிகைக்குச் சென்று ரகசியமாக அவர்களை கண்காணித்து என்ன நடந்தது என்பதை என்னிடம்சொல் என்று அனுப்பிவைத்தான்.
கிராமவாசிகளின் மதிநுட்பம் (தொடர்ச்சி)
இன்றிரவு என் விருந்தினர் மாளிகையில் தங்குங்கள்.
நாளை உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறேன் என்ற நீதிபதி அவர்கள் சென்ற பின் காவலாளியை அழைத்து அவர்களைப் பின் தொடர்ந்து செல் விருந்தினர் மாளிகையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ரகசியமாக கண்காணித்து என்னிடம் சொல் என உத்தரவிட்டார்.
மாளிகைக்கு சென்ற மூவரும் தாங்கள் கண்காணிக்கப் படுகிறோம் என்பதை உணர்ந்துக் கொண்டார்கள். . இரவு உணவாக ரொட்டியும் இறைச்சியும் பரிமாறப்பட்டது
இறைச்சி த்துண்டை எடுத்து ஒருவன் சொன்னான் : இது நாய்க்கறி(இறைச்சி)
மற்றொரு வன் சொன்னான் : இந்த ரொட்டியை நிறைமாத கர்ப்பிணி தயாரித்து இருக்கிறாள்
இன்னொருவன் சொன்னான்: இந்த நீதிபதி முறை தவறி பிறந்தவர்
இவர்கள் பேசிக் கொண்டிருந்தததை செவி மெடுத்த காவலாளி மறுநாள் நீதிபதியிடம் சென்று நடந்ததைச் சொன்னான்
நீதிபதி அவர்கள் மூவரையும் வரவழைத்து
நாய்க்கறி என்று சொன்னவன் யார் என்க
நான்தான் என்றான் முதலாம் அப்துல்லாஹ்
எவ்வாறு சொன்னாய் என்று கேட்டார்.
பொதுவாக, ஆடு, , ஒட்டகம் போன்ற இறைச்சிகளில் கொழுப்பு எலும்புக்கு கீழே இருக்கும். நாய் இறைச்சியில் மட்டும் தான் கொழுப்பு எலும்புக்கு மேலே இருக்கும். அதை வைத்து நான் நாய்க்கறி என்று சொன்னேன் என்றான்.
அதை கேட்டு மகிழ்ந்த காஜி உன் தந்தைக்கு நீ வாரிசு ஆவாய் என்றார்
ரொட்டியை நிறைமாத கர்ப்பிணி தயாரித்ததாக சொன்னவன் யார் என்று கேட்டார். இரண்டாம் அப்துல்லாஹ் நான் தான் என்க
எவ்வாறு சொன்னாய் என்று வினவினார்.
நான் ரொட்டியை எடுத்துப் பார்த்தேன். அது ஒரு பக்கம் உப்பலாகவும் மறுபக்கம் தட்டையாகவும் இருந்தது. அதை தயாரித்தவள் வயிறு பெரிதாக இருந்த காரணத்தால் நெருப்பின் அனலுக்குப் பயந்து அடுப்புக்கு அருகே சென்று குனிந்து அதை சரியாக பிரட்டி ப் போட முடியாததால் அவ்வாறு அரைகுறை யாக வெந்து இருக்கிறது என்று யூகித்தேன் என்றான்.
அதை கேட்ட நீதிபதி உற்சாகத்துடன் நீயும் வாரிசு ஆவாய் என்றார்.
மூன்றாம் அப்துல்லாஹ்விடம் கேட்பதற்கு முன்னால் வீட்டிற்குள் சென்று தன தாயாரிடம் உறுதிபடுத்திவிட்டு வந்தவர் என்னை முறைதவறி பிறந்தவன் என்று எவ்வாறு சொன்னாய் என அவனிடம் கேட்டார்.
விருந்தாளிகளுக்கு நாய் இறைச்சியையும், வேகாத ரொட்டியையும் பரிமாரியதுடன் அவர்களை ரகசியமாக கண்காணிக்கச் சொன்னவன் ஒரு நீதிபதி குடும்பத்தை சேர்ந்தவனாக இருக்க முடியாது என யூகித்தேன் . எனவே தான் நான் அவ்வாறு சொன்னேன் என்றான்.
நீ சொன்னது சரிதான் என்று சொன்ன நீதிபதி உன் தந்தைக்கு நீ வாரிசுஆக மாட்டாய் என்று தீர்ப்பளித்தார்
எவ்வாறு அவ்விதம் சொல்கிறீர்கள் என்று இவன் கேட்க. முறை தவறி பிறந்தவனுக்கு தான் மற்றவனை முறை தவறி பிறந்தவன் என்று எண்ணத்தோன்றும்.
எனவே, நீ உன் தந்தைக்கு பிறந்திருக்க முடியாது, ஊருக்கு சென்று உன் தாயிடம் கேட்டுப் பார் என்று அனுப்பிவைத்தார்
அவர்கள் மூவரும் கிராமத்திற்கு திரும்பிச் சென்று தாயாரிடம் நடந்ததை கூறினார்கள்.
நீதிபதி சொன்னது சரிதான் என்ற தாய்,
உங்கள் தந்தை பள்ளிவாசலுக்கு தொழச் சென்றிருந்போது வாசலில் பச்சிளம் குழந்தையாக அழுதுக் கொண்டிருந்தவனை எடுத்து வந்து நாங்கள் எங்கள் பிள்ளையைப் போன்று வளர்த்தோம் அவன் தான் மூன்றாவது அப்துல்லாஹ் என்றார்.
கிராமத்து அரபுகள் மிகவும் மதி நுட்பம் உடையவர்களாகவும் ஊகித்தறியும் திறன் உள்ளவர்களாகவும் இருந்தார்கள் என்பதற்கு பல கதைகள் சொல்லப்படுகின்றன. அதில், இதுவும் ஒன்று.
-------கணியூர் இஸ்மாயில் நாஜி

No comments:
Post a Comment