Friday, March 25, 2022

மனைவி அமைவதெல்லாம்

ஒரு கணவன், அவன் மனைவி என்னதான் சுவையாக உணவு தயாரித்தாலும் விதவிதமான சிற்றுண்டி தயாரித்தாலும் சாப்பிட்டுவிட்டு "நன்றாக இருக்கிறது ஆனால் என் அம்மாவுடைய கை பக்குவம் இல்லை என்று சொல்லுவதை பழக்கமாக வைத்திருந்தான்

அவ்வாறு அவன் சொல்லும் பொழுதெல்லாம் மனைவி மறுப்பேதும் சொல்லாமல் கணவனின் கண்களை பார்த்தவண்ணம் வாய்க்குள்ளே சில வார்த்தைகளை முணுமுணுத்துக் கொள்வாள்

 இவ்வாறு கணவன் தன் தாயாரைப் புகழ்வதும்  மனைவி அதை சிரித்த முகத்துடன் அவன் முகத்தை பார்த்த வண்ணம் வாய்க்குள் முணுமுணுப்பதுமாக 27 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்நிலையில்  கணவனின்
தாயார் மரணம் அடைந்து விட்டார் தாயாரின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு சோகமாக கணவன் தனியாக அமர்ந்திருந்தான்  அவன் அருகில் அமர்ந்த மனைவி அவனை அன்போடு அரவணைத்துக் கொண்டு ஆறுதலாக சில வார்த்தைகளை பேசிவிட்டு அவனுக்கு உணவு பரிமாறினாள்.

 உணவு உண்டவுடன் கணவன், இன்று நீ சமைத்த உணவு என் அம்மா சமையலைப் போன்று சுவையாக இருந்தது உன்னுடைய  ஆறுதலான பேச்சும் என் அம்மா பேசுவது  போன்றே இருக்கின்றது என்று சொன்னான்
 இதைக் கேட்ட போதும் மனைவி  ஒன்றும் சொல்லாமல்  அவனைப் பார்த்துக்கொண்டே புன்னகைத்த வண்ணம் வழக்கம்போல் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தாள்

  கணவன், நான் என் அம்மாவைப் பற்றி பேசும் போதெல்லாம் நீ என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்த வண்ணம் ஏதோ வாயில் முணுமுணுப்பாய் அதைப்பற்றி நான் இதுவரைக் கேட்கவில்லை இப்பொழுது கேட்கிறேன்
   என்னைப் பார்த்தவண்ணம் என்ன சொல்லி முணுமுணுப்பாய் என்று கேட்டான்

 அதற்கு மனைவி சொன்னாள் நீங்கள் உங்கள் தாயாரை பற்றி பேசும்போதெல்லாம் நான் அல்லாஹ்விடம்  
   
#யாஅல்லாஹ்! எவ்விதம் என்கணவனின் உள்ளத்தில் அவருடைய தாயாரைப் பற்றிய மதிப்பையும் அன்பையும் விதைத்தாயோ அதேபோன்று என் மகனின் உள்ளத்தில் என் மீது அன்பையும் மரியாதையையும் விதைப்பாயாக!" என்று நான் துஆ செய்வேன் என்றாள்.

 அதைக் கேட்டதும் கணவனின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது அவளின் நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னான்
'உன்னை மணமுடிக்கும் போது  எனக்கு வயது இருபத்தி ஏழு 
நாம் 27 ஆண்டுகள் ஒன்றாக  வாழ்ந்திருக்கிறோம் இந்த 27 ஆண்டுகளில் நீ என் தாயாருக்கு இணையாக மாறிவிட்டாய்"
 
அதைக்கேட்டதும் மனைவி சொன்னாள்: நீங்கள் ஒரு கணக்கு ஆசிரியராக இருந்தும் கணக்கில் தவறு செய்கிறீர்கள்   திருமணமாகும் போது உங்களுக்கு 27 வயது  நமக்கு திருமணம் முடிந்து 27 ஆகிவிட்டது என்றால் இப்பொழுது உங்கள் வயது 54 .இந்த 54 ஆண்டுகள்  உங்கள் தாயாரின் நிழலில் வாழ்ந்திருக்கிறீர்கள்  என்னுடன்  வாழ்ந்த 27 ஆண்டுகள்
அந்த 54ஆண்டுகளுக்கு  நிகராகுமா?
அன்னையின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது 
அன்னை சுவனத்தின் வாசல்
 உலகத்தில் யாரும் அன்னைக்கு  நிகராகமுடியாது"

 மனைவியின் பேச்சைக் கேட்க க் கேட்க கணவன் இத்தகைய  நற்குணமிக்க மனைவியை அளித்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினான்.

இல்லாள் அமைவதெல்லாம்
இறைவன் வழங்கும் அருட்கொடை.
____ அரபு இணைய தளத்திலிருந்து கணியூர் இஸ்மாயில் நாஜி

No comments:

Post a Comment