Wednesday, June 1, 2022

அல்லாஹ் வழிகாட்டாவிட்டால்

“ஒரு முஸ்லிம் செய்த பெரும்பாவம் அவனை சொர்க்கத்தில் சேர்த்து விடுகிறது. அவன் செய்த நல்அமல் அவனை நரகத்தில் சேர்க்கிறது” என்று சில பெரியவர்கள் சொல்கிறார்கள்.
-----------------======-===============
இந்த கருத்தை பற்றி இமாம் இப்னு கய்யிம் ரஹிமஹுல்லாஹு  அவர்களிடம் கேட்கப்பட்டது.

 அதற்கு அவர்கள் கூறிய விளக்கத்தின் சுருக்கம் : 

ஒரு முஸ்லிம் தன் மன இச்சையை அடக்க முடியாமல் பெரும் பாவத்தை செய்து விடுகிறான்.

அதன்பின், மன உறுத்தலுக்கு ஆளாகிறான். எழுந்தாலும் உட்கார்ந்தாலும், நின்றாலும் உறங்கினாலும் தான் செய்த பாவமே அவன் கண் முன்னால் நிற்கிறது. தான் செய்த பாவத்தை எண்ணி எண்ணி அல்லாஹ்விடம் அழுது அழுது பாவ மன்னிப்பு கேட்கிறான்.

 அவன் பாவம் செய்ததற்கு முன்பு இருந்ததை விட வணக்கங்களில் அதிகமாக ஈடுபட ஆரம்பித்து விடுகிறான் .
இறுதியில், அல்லாஹ் அவன் பாவத்தை மன்னிக்கிறான். அவனை சொர்க்கவாசியாக மாற்றிவிடுகிறான்.

 அதே நேரத்தில், ஒரு முஸ்லிம் சிறப்பான நல் அமலைச் செய்கிறான்.

 அந்த அமல் அவன் மனதை மகிழ்வடைய செய்கிறது. யாரும் செய்யாத ஒரு நல்அமலை செய்ததாக நினைக்கிறான். எழுந்தாலும் உட்கார்ந்தாலும், நின்றாலும் உறங்கினாலும் தான் செய்த நல்அமலை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறான். தன்னை தானே “சபாஷ்” என்று பாராட்டி கொள்கிறான். 

அமல் செய்ததற்கு அல்லாஹ்வின் தவ்ஃபீக் இருந்தால் தான் நல்அமல் செய்ய முடியும் என்பதை அவன் மறந்து விடுகிறான்.

அவனின் இந்த செயல் அல்லாஹ்விற்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அவனின் நல்அமலை அல்லாஹ் ஏற்று கொள்ளமால் தூக்கி எறிந்து அவனை நரகத்தில் தள்ளி விடுகிறான்.

  இதை தான் “ஒரு முஸ்லிம் செய்த பெரும்பாவம் அவனை சொர்க்கத்தில் சேர்த்து விடுகிறது. அவன் செய்த நல்அமல் அவனை நரகத்தில் சேர்க்கிறது” என்று இமாம் அவர்கள் விளக்க தந்தார்கள்.

அல்லாஹ் நாடினாலே தவிர நாம் ஒரு நல்அமலை செய்ய முடியாது. 

எனவே,  பாவம் செய்தால் அல்லாஹ்விடம் எப்படி இஸ்திஃபார்  செய்கிறோமோ அவ்வாறே நாம் ஒரு நல்அமல் செய்தால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்......

எனவே தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

 அல்ஹம்துலில்லாஹில்லதி ஹதானா லிஹாதா வமாகுன்னா லநஹ்ததி லவ்லா ஹதாநல்லாஹ், “இந்த நேர்வழியை காட்டிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும். அவன் நேர்வழி காட்டாமால் இருந்தால் நிச்சயமாக நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்.” என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பார்கள்.

ஃபர்ளான தொழுகையை நாம் நிறைவேற்றிய பின்னால் “அஸ்தஃபிருல்லாஹ்” என்று மூன்று தடவை சொல்வது சுன்னத்தாக இருக்கிறது. காரணம், நம்முடைய தொழுகை அல்லாஹ் ஏற்று கொள்ளும் வண்ணம் முழுமையாக இருந்ததா என்று நமக்கு தெரியாது. அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுகிறோம்.

ஆகவே, நாம் தொழுதாலும், ஸதகா கொடுத்தாலும் வேறு நல்அமல்களை  செய்தாலும் அவற்றை செய்வதற்கு தவ்ஃபீக் செய்த அல்லாஹ்வை புகழ்ந்து நன்றி செலுத்த வேண்டும்.
------கணியூர் இஸ்மாயீல் நாஜி

No comments:

Post a Comment